தெருத்தெருவாக பைக்கில் சென்று டாஸ்மாக் மது விற்ற ஆசாமி கைது

வேலூர், ஜூன் 4: வேலூரில் டாஸ்மாக் மது பாட்டில்களை பைக்கில் கொண்டு வந்து அதிக விலைக்கு விற்றவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் தொரப்பாடி தொடங்கி சின்னஅல்லாபுரம் வரை பல்வேறு வழிகளில் டாஸ்மாக் மது பாட்டில்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக பாகாயம் போலீசாருக்கு தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை பாகாயம் போலீசார் அப்பகுதிகளில் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சின்னஅல்லாபுரம் நேரு வீதி அருகே ஸ்கூட்டரில் ஒருவர் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்றுக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை சுற்றி வளைத்த போலீசார் அவரது பைக்கை சோசனையிட்டபோது அவரிடம் 180 மில்லி அளவு கொண்ட 30 குவார்ட்டர் மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இவர் டாஸ்மாக் மதுக்கடையில் மொத்தமாக பாட்டில்களை வாங்கி வந்து தனது ஸ்கூட்டர் மூலம் தெருக்களில் சுற்றி விற்று வருவதும் தெரிய வந்தது. மேலும் அவர் அதே பகுதியை சேர்ந்த சந்திரன்(56) என்பதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்திரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: