×

இன்னும் ஓராண்டில் பிரதமராக மோடி இருக்க மாட்டார்: ராகுல் காந்தி கணிப்பு

புதுடெல்லி: டெல்லி இந்திரா பவனில், காங்கிரஸ் கட்சியின் பழங்குடியினர் பிரிவான ஆதிவாசி காங்கிரஸ் நேற்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது:ஒருபுறம் பொருளாதார சுனாமி ஒன்று நெருங்கிக் கொண்டிருக்கிறது. விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கிறது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே. உங்கள் வாழ்நாளில் நீங்கள் இதுவரை கண்டிராத வகையிலான பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்திக்க இருக்கிறது. இதை யாராலும் தடுக்க முடியாது.

மறுபுறம், மக்களின் அழுத்தம் காரணமாக அரசு நிர்வாக அமைப்பிற்குள் கிளர்ச்சி வெடித்திருக்கிறது. ஒருகாலத்தில் மோடியின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த அமைப்பு தற்போது சரிந்து கொண்டிருக்கிறது. அந்த அமைப்பு இப்போது மோடி குறித்தும், அவரது அமைச்சரவை சகாக்கள் குறித்தும் எனக்கு தகவல்களை அளித்து வருகின்றன. தலைமை தேர்தல் ஆணையர், உளவுத்துறை தலைவர், மூத்த நீதித்துறை உறுப்பினர்கள் என பலரும் தகவல்களை அளித்து வருகின்றனர். இந்த நிலை நீடித்தால் என் கணிப்புப்படி, இன்னும் ஓராண்டு காலத்தில் மோடி பிரதமராக இருக்க மாட்டார்.

தேர்தல் நடைமுறையில் முறைகேடுகள் நடைபெறுகின்றன என்பதை மக்கள் அறிந்து கொண்டால், பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் கோபம் வெடித்து சிதறினால், நாளை என்ன நடக்குமோ என தேர்தல் ஆணையமும் கவலைப்படத் தொடங்கி உள்ளது. அந்த அமைப்பு ஆட்டம் காணத் தொடங்கி விட்டது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Tags : Modi ,Rahul Gandhi ,New Delhi ,Adivasi Congress ,Congress party ,Indira Bhavan ,Delhi ,
× RELATED கூட்டணி பேரம்; தலைமைச் செயலகமா? தவெக...