* அலட்சியம் அபாயமாகும்
உயிரியல் பன்முகத்தன்மை வளங்கள் தான், நமது நாகரிகத்தை கட்டமைக்கும் தூண்கள். மனித ஆரோக்கியத்திற்கான அடிப்படையும், உயிரியல் பன்முகத்தன்மை தான். உதாரணமாக மீன்களை எடுத்துக் கொண்டால், 3 பில்லியன் மக்களுக்கு 20 சதவீத புரதத்தை வழங்குகிறது. மனித உணவில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை தாவரங்களால் வழங்கப்படுகின்றன. வளரும் நாடுகளில் கிராமப்புறங்களில் வசிக்கும் 80 சதவீதம் மக்கள், அடிப்படை சுகாதாரத்திற்காக, பாரம்பரிய தாவர மருந்துகளையே இன்றுவரை நம்பியிருக்கின்றனர். ஆனால், சமீப ஆண்டுகளாக உலகம் முழுவதும் பல்லுயிர் அழிப்பு என்பது வேகமாக அரங்கேறி வருகிறது.
பல்லுயிர் இழப்பு என்பது ஜினோசை விரிவுபடுத்தும் என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்களுக்கு, பல்லுயிர் அழிப்பே காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்லுயிர் நிலையில் மாற்றாமல் அப்படியே வைத்திருந்தால், கொரோனா போன்ற கொடிய நோய்கள் வந்திருக்காது என்பதையும் ஆய்வுகள் தெளிவாக்கி உள்ளது. இந்த வகையில் பல்லுயிர் அழிப்பு அல்லது இழப்பு என்பது, மனித ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்தையும் அச்சுறுத்துகிறது. எனவே, உயிரியல் பன்முகத்தன்மை என்பது வருங்கால சந்ததிக்கு நாம் சேர்த்து வைக்கும் உலகளாவிய சொத்து என்பதே உண்மை.
இதை உணர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் மே 22ம்தேதி சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதுதொடர்பாக, பல்லுயிர் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் கூறியதாவது: உயிரியல் பன்முகத்தன்மை என்பது பல்வேறு வகையான தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகளை உள்ளடக்கியது. இதுபோன்ற ஒவ்வொரு இனத்திலும் மரபணு வேறுபாடுகள் உள்ளது. ஆனால் இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்து, சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான ஆதாரங்களாக திகழ்கிறது. மனித வாழ்க்கை மேம்பாட்டுக்கும் உயிரியல் பன்முகத்தன்மை என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது.
நமது சுற்றுச்சூழலின் ஒவ்வொரு பகுதியும் ஒரு புதிரைப் போன்றது. ஒவ்வொரு உயிரினமும் மற்றொன்றை சார்ந்துள்ளது. உதாரணமாக வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் மனிதர்களை மட்டும் பாதிக்காது. தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூமியில் வளர்ந்து வாழக்கூடிய அனைத்து உயிரினங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். செடி, ெகாடிகளை சார்ந்துள்ள பூச்சியினம் தொடங்கி காடுகளில் வாழும் பெரிய விலங்கினங்கள் வரை அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு பெரும் சேவையாற்றி வருகின்றன. பொழுது போக்கிற்காக வேட்டையாடுதல், உடற்பாகங்களுக்காக ெகால்லுதல் போன்ற செயல்பாடுகள் வனஉயிரினங்களை அழிவின் பிடிக்கே கொண்டு செல்கிறது.
தோல், இறைச்சி, உரோமம், தந்தம், ெகாம்பு, நகம், இறைச்சி, மருத்துவ பயன்பாட்டுக்காக ெகால்லப்படுவதால் குறிப்பிட்ட உயிரினங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதுபோன்ற விலங்குகளை அழிக்கும் போது, சுற்றுப்புறத்தில் உள்ள நுண்ணுயிரிகளும் ஏராளமாக அழிக்கப்படுகிறது. உதாரணமாக ஒரு தேனீ இனம் அழிந்தால், ஒரு காடே அழிந்து போகும் அபாயமும் உள்ளது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது. காடுகள் அழிந்தால் மழை வளம் பொய்க்கும். மழை வளம் பொய்த்தால் மண் வளம் குறைந்து ேபாகும்.
மண் வளம் குறைந்தால், மனிதர்களின் உணவுக்கான தானியங்களும், தாவரங்களும் கிடைக்காது. இது ஒரு கட்டத்தில் புவி வெப்பமயமாதல், தண்ணீர் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் மாசு போன்றவை பல்வேறு பாதிப்புகளுக்கு வழிவகுத்து விடும். இந்த அடிப்படையை அனைத்து தரப்பு மக்களும் உணர வேண்டும். தேனீயை போல் ஒவ்வொரு உயிரினத்திற்கும் இயற்கையை மேம்படுத்தும் ஒரு ஆற்றல் உள்ளது. அவற்றை அழிப்பது பெருத்த அபாயங்களுக்கே வழிவகுக்கும். மொத்தத்தில் பல்லுயிர் பெருக்கம் என்பது அழிந்தால், அது ஏற்படுத்தும் பெரும் பாதிப்பும் மனித குலத்தையே வந்து சேரும். இதை நாம் ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இவ்வாறு நிபுணர்கள் கூறினர்.
ஏன் அவசியம்?
சுற்றுச்சூழல் அமைப்புகளின் சமநிலைக்கு பல்லுயிர் பெருக்கம் அவசியம். பல்லுயிர் இழப்பு உணவு பாதுகாப்பு மற்றும் மனித நல்வாழ்வில் தீவிர தாக்கங்களை ஏற்படுத்துகிறது. அழிவுக்கான காரணங்களைத் தணிக்கவும், இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாக்கவும் பல்லுயிர் பெருக்கம் அவசியம். பல்லுயிர்களான தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் இருப்பதால், சுத்தமான காற்று மற்றும் குடிநீரை நாம் அனுபவிக்க முடியும். மகரந்தச் சேர்க்கை, நமது விவசாயத்திற்கான அத்தியாவசிய சேவை. தேனீக்கள் போன்ற சில பூச்சிகளால் அது வழங்கப்படுகிறது. மனித நடவடிக்கையால் பல்லுயிர் பெருக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது. காலநிலை சமநிலைக்கும், காடுகள் மற்றும் பெருங்கடல்கள் ஆரோக்கியமான சுற்றுச்சூழலில் இருக்கவும், பல்லுயிர் பெருக்கம் மிகவும் அவசியம் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கூற்று.
இந்தியாவின் சிறப்பு மாறுது
இந்தியாவின் சிறப்பே ‘பல்லுயிரின பாதுகாப்பு நாடு’ என்பது தான். மரங்கள், செடிகள், கொடிகள், பாலூட்டிகள், ஊர்வன, பறப்பன, நீர்மற்றும் நிலவாழ் உயிரினங்கள் என்றும் அனைத்தும் வாழத்தகுதியான நிலப்பரப்பை ெகாண்ட நாடு இந்தியா. ஆனால், இங்கும் சமீப ஆண்டுகளாக தொடரும் மனித செயல்பாடுகள், பல்லுயிர்களின் பெருக்கத்தை அழித்து வருகிறது. வனங்களை விளைநிலங்களாக மாற்றுதல், விளைநிலங்களை பிளாட்டுகளாக மாற்றுதல், நகரமயமாக்குதல், கட்டுப்பாடற்ற மேய்ச்சல் முறைகள், புதிய தொழிற்சாலைகள், சுரங்கப்பணிகள், வர்த்தக ரீதியான மரத்தொழிற்சாலைகள் போன்றவை, பல்லுயிர் பெருக்கத்திற்கு பெரும் ஆபத்தாக மாறி வருகிறது. எனவே, இது போன்ற நடவடிக்கைளின் போது, பல்லுயிர் பெருக்கத்திற்கான அளவுகோலையும் கருத்தில் கொண்டு அனுமதிகள் வழங்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
பல்லுயிர் இழப்பு தரும் விளைவுகள்
உணவு பாதுகாப்பு: பல்லுயிர் இழப்பு உணவு உற்பத்தியை பாதித்து, உணவு பாதுகாப்பை அச்சுறுத்துகிறது. பல பயிர்களின் மகரந்த சேர்க்கைக்கு தேவையான பூச்சி இனங்கள் அழிந்து வருவது இதற்கு ஒரு உதாரணம். நோய்களின் பரவல்: உயிரினங்களின் இயற்கை சமநிலை சீர்குலைவதால், நோய்கள் பரவும் அபாயம் அதிகரிக்கிறது. எடுத்துக்காட்டாக, காடுகள் அழிக்கப்படுவதால் வனவிலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய்கள் பரவும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
தூய்மையான நீர் மற்றும் காற்று: காடுகள், சதுப்பு நிலங்கள் போன்றவை இயற்கையாகவே நீர் மற்றும் காற்றை தூய்மைப்படுத்தும் பணியை செய்கின்றன. இவை அழிக்கப்படுவதால் தூய்மையான நீர் மற்றும் காற்று கிடைப்பது அரிதாகிறது. காலநிலை ஒழுங்குமுறை: காடுகள் கரியமில வாயுவை உறிஞ்சி, புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துகின்றன. இவை அழிக்கப்படுவதால் காலநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரிக்கிறது.
மருந்து மற்றும் பிற பொருட்கள்: பல மருந்துகள் மற்றும் பிற பயனுள்ள பொருட்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளிடமிருந்து பெறப்படுகின்றன. பல்லுயிர் இழப்பு இந்த வளங்களை அழித்து மனித நலனை பாதிக்கிறது.
