* தேர்வு முறையின் மீதான நம்பிக்கை கேள்விக்குறி
* விடைத்தாள் மாறியதால் திகைத்து நிற்கும் மாணவர்கள்
கடந்த மே 13ம் தேதி வெளியான சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவு, நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்து விட்டது. 17 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய ஒரு அவலமாக இது அமைந்து விட்டது என்கின்றனர் கல்வியாளர்கள். இதற்கு காரணம், ஓஎஸ்எம் எனப்படும் புதிய மின்னணு மதிப்பீட்டு முறையான திரைவழி மதிப்பீட்டு முறை (டிஜிட்டல் மதிப்பீட்டு முறை). இதன்படி, அனைத்து விடைத்தாள்களிலும் ஒரு ரகசியக் குறியீடு இடப்படும். அவை தேர்வு மையங்களிலிருந்து மண்டல அலுவலகங்களுக்குக் கொண்டு செல்லப்படும். அந்தத் தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு ஒரு இணையதளத்தில் பதிவேற்றப்படும்.
மதிப்பீட்டாளர்கள் அந்த இணையதளத்திற்குள் நுழைந்து, சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்களைக் கொண்ட ஒரு குழுவால் உருவாக்கப்பட்ட மதிப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வர். அதன்படி, சுமார் 17 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சொந்தமான 98 லட்சத்திற்கு அதிகமான விடைத்தாள்கள் இந்த ஓஎஸ்எம் முறையில் மதிப்பீடு செய்யப்பட்டன. தொடர்ந்து மே 13ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. அப்போது தான் அனைவருக்குமான அதிர்ச்சி காத்திருந்தது. பல மாணவர்களுக்கு நம்பமுடியாத அளவில் மிகவும் குறைந்த மதிப்பெண்கள் கிடைத்திருந்தன. ஒட்டுமொத்த தேர்ச்சி தேசிய அளவில் 85.29 சதவீதமாக இருந்தது.
கிட்டதட்ட இது முந்தைய ஆண்டை விட 3.19% குறைவாகும். தேர்ச்சி விகிதம் சரியும்போதெல்லாம், மாணவர்கள் சரியாக படித்திருக்க மாட்டார்கள். அதனால்தான் தேர்ச்சி விகிதம் குறைந்து விட்டது என்ற பொதுவான கருத்து முன்வைக்கப்படும். இந்த முறை அப்படியல்ல. டிஜிட்டல் குளறுபடி அவர்கள் வாழ்க்கையை, எதிர்காலத்தை சூனியமாக்கிவிட்ட அவலம் நடந்தேறியுள்ளது. நன்றாக படிக்கும் மாணவர்களே குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தனர். 70 சதவீதம் மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தவருக்கு வெறும் 12 சதவீதம் மதிப்பெண். விடைத்தாளே மாறிவிட்டதால் நடந்த குளறுபடி இது. மறு மதிப்பீட்டுக்காக விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பெற முயன்ற மாணவர்களுக்கு, மங்கலாக உள்ள விடைத்தாள்கள், விடுபட்ட பக்கங்கள் மற்றும் சிலருக்கு வேறொரு மாணவரின் விடைத்தாள்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
மறுமதிப்பீட்டிற்கான கட்டணம் செலுத்தும் அமைப்பு செயலிழந்தது என குழப்பத்திற்கு மேல் குழப்பம் நிகழ, இது நம் மதிப்பெண்தானா என்ற கேள்வியோடு மார்க் ஷீட்டுகளை ஏந்தி நிற்கும் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த குளறுபடிகளை ஒப்புக் கொண்டுள்ள ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இதற்கு தான் பொறுப்பேற்பதாக கூறியுள்ளார். ஆனால், இதை குளறுபடி என்பதை விட, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தேர்வு முறையில் நடந்த மிகப்பெரிய ஊழல் என்று கூட வர்ணிக்கப்படுகிறது.
சொன்னதும், நடந்ததும்…
டிஜிட்டல் மதிப்பீட்டு முறை குறைபாடு அற்றது. மாணவர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, ஒரு பாதுகாப்பான டிஜிட்டல் தளத்தில் பதிவேற்றப்பட்டு ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்படுகின்றன. மதிப்பெண்கள் தானாகவே அட்டவணைப்படுத்தப்பட்டு விடும் என்பதால் கூட்டல் பிழைகள் தவிர்க்கப்படுகின்றன. உலகில் எந்த இடத்தில் இருந்தும் எந்தவொரு சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியரும் இணையதளத்தின் மூலம் மதிப்பீடு செய்யலாம். வெளிப்படைத்தன்மை கொண்டது இது. மாணவர்கள் தங்கள் சொந்த விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை எளிதாக அணுகலாம் என இந்த டிஜிட்டல் மதிப்பீடு முறையை வர்ணித்தது அரசு. ஆனால், இதில் நடந்த குளறுபடி, ஒட்டுமொத்த மாணவர்களின் எதிர்காலத்தை சிதைப்பதாக அமைந்து விட்டது.
தோல்வி அடைந்தது எப்படி?
ஓஎஸ்எம் எனப்படும் திரைவழி டிஜிட்டல் மதிப்பீட்டு முறை தோல்வி அடைந்தது தனி நிகழ்வு அல்ல. மாறாக மென்பொருள், வன்பொருள், மனித திறன் மற்றும் நிர்வாக தோல்வி என ஒரே நேரத்தில் ஏற்பட்ட தொடர் தோல்விகளின் விளைவு என்கின்றனர் கல்வியாளர்கள். இதில் முதல் பிரச்னை விடைத்தாள் ஸ்கேன் தரத்தில் தான் தொடங்கியுள்ளது. ஒரு மாணவரின் கையால் எழுதப்பட்ட விடைத்தாளைத் தெளிவாக டிஜிட்டல் மயமாக்க முடியாவிட்டால், அதன் தொடர்ச்சியான முழு மதிப்பீடும் பாதிக்கப்படுகிறது. தேர்வு முடிவுகளுக்குப் பிறகு தங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பார்த்த மாணவர்கள், பக்கங்கள் படிக்க முடியாத அளவுக்கு மங்கலாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மதிப்பீடு செய்த ஆசிரியர்களும் இதை வைத்துத்தான் மதிப்பீடு வழங்கியுள்ளனர்.
சமூக வலைதளத்தில் ஒரு மாணவர் வெளியிட்ட பதிவில், தனது விடைத்தாள் ஒரு வரியைக் கூடப் படிக்க முடியாத அளவுக்கு மோசமாக இருந்தது எனவும், அதில் சிவப்பு நிறத்தில் டிக் குறியீடு செய்து தன்னிச்சையான மதிப்பெண்களை வழங்கியிருந்தனர் என குறிப்பிட்டிருந்தார். இதைவிட மோசமாக, சில மாணவர்கள் விடைத்தாள் நகல் தங்களுடையதே இல்லை எனதெரிவித்திருந்தனர். அவர்களது பதிவு எண்ணில் வேறொரு மாணவரின் விடைத்தாள் இணைக்கப்பட்டிருந்தது. இதுபோல் சஞ்சனா என்ற மாணவி, வேதியியலில் 70 மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், 11 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்ததால் அதிர்ச்சி அடைந்தார். ஸ்கேனிங் நகலை வாங்கி பார்த்தபோதுதான் அது தன்னுடைய விடைத்தாளே இல்லை என்பது தெரிந்தது. இதுபோல் சுமார் 30 விடைத்தாள்களை மீண்டும் ஸ்கேன் செய்யாமல் நிராகரித்ததாக சிபிஎஸ்இயே ஒப்புக்கொண்டது. இது நிர்வாக முறைகேடு எந்த அளவுக்கு நடந்துள்ளது என்பதை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது.
சில மாணவர்கள் மறு மதிப்பீட்டுக்காக தங்களின் விடைத்தாள் நகல்களை கேட்டு விண்ணப்பிக்க முயன்றபோது, இணையதளம் முடங்கியதால் பணம் செலுத்த முடியவில்லை. சிலர், ஒரு பாடத்தை மறு மதிப்பீடு செய்ய ரூ.69,000 வரை கட்டணம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இணையதள கோளாறால் இது நடந்ததாக கூறப்பட்ட நிலையில், பின்னர் ஸ்கேன் செய்யப்பட்ட நகலுக்கு ரூ.100, சரிபார்ப்புக்கு ரூ.100, மறுமதிப்பீட்டிற்கு ஒரு கேள்விக்கு ரூ.25 எனவும், மறு ஆய்வுக்குப் பிறகு மதிப்பெண்கள் அதிகரித்தால் முழுப் பணமும் திருப்பித் தரப்படும் என்றும் சிபிஎஸ்இ உறுதியளித்தது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்க செய்து விட்டது.
அவசர கதியில் ஓஎஸ்எம் மதிப்பீடு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்வு முடிவுக்கு சில மாதம் முன்பாக, கடந்த பிப்ரவரி 26ம் தேதி நடைபெற்ற மாதிரி மதிப்பீட்டு அமர்வு நடந்தது. அப்போது ஆசிரியர்கள் இணையதளத்தை அணுகுவதில் சிக்கல், மெதுவான கணினிச் செயல்பாடு, பள்ளிகளில் போதுமான இணைய இணைப்பு இல்லாமை, மற்றும் இணையதளத்தில் ஆசிரியர் தரவுகளில் உள்ள பிழைகள் ஆகியவற்றை ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதையெல்லாம் சரி செய்யாமலேயே இந்த புதிய நடைமுறை அவசர கதியில் செயல்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மதிப்பீட்டில் ஒரே மாதிரியான தரத்தை உருவாக்குதல், மதிப்பெண் கூட்டலில் பிழைகளை குறைத்தல், மதிப்பீட்டை வேகமாக முடித்தல், கண்காணிப்பை மேம்படுத்துதல், பாதுகாப்பை அதிகரித்தல் ஆகியவை முக்கிய நோக்கங்களாக வைத்து சிபிஎஸ்இ தேர்வு வாரியம் இதனை செயல்படுத்தியது.
இங்கிலாந்தில் டிஜிட்டல் மதிப்பீட்டு முறைகள் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன. அதற்கான உள்கட்டமைப்பு அங்கு வலுவாக உள்ளது. ஆனால் இந்தியாவில் பரிசோதனை முயற்சி, பயிற்சி, போதுமான உள்கட்டமைப்புகள் இல்லாமலும் முன்னோட்டம் செய்யாமலும் மோடி அரசு செயல்படுத்தியது, 17 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தையே சூனியமாக்கிய அவசரக்கோலம், கல்வி நடைமுறையில் அரங்கேறிய அலங்கோலம் என வர்ணிக்கின்றனர் கல்வியாளர்கள். 4 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தங்களின் மதிப்பெண்கள் குறித்து சந்தேகம் எழுப்பி விண்ணப்பித்திருக்கின்றனர்.
மங்கலான ஸ்கேன்கள், காணாமல் போன பக்கங்கள், தவறான விடைத்தாள் இணைப்புகள் என அடுக்கடுக்கான குளறுபடிகள் முறைகேடுகள் நடந்துள்ளதா என்ற சந்தேகத்தையும் வலுவாக எழுப்பியுள்ளது. மொத்தத்தில் இது நாட்டின் தேர்வு முறை மீதான மாணவர்களின் நம்பிக்கையை முழுமையாக சீர்குலைத்து விட்டது. இது மீட்டெடுக்கப்படாவிட்டால், ஒட்டுமொத்த மாணவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல, தேர்வு முறை மீதான நம்பிக்கை முற்றிலுமாக போய்விடும் என்பதை உணர வேண்டிய தருணம் இது.
தீர்வு காண்பதற்கு பதில் மூடி மறைக்க முயற்சி
தேர்வு முடிந்து பல வாரங்கள் ஆகியும் வணிகவியல் மற்றும் உயிரியல் போன்ற பாடங்களை திருத்த முடியவில்லை. இதில் தொடர்ச்சியான சிக்கல்கள் உள்ளன என டெல்லியை சேர்ந்த சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர் புகார் பதிவு செய்துள்ளார். ஆனால் சிபிஎஸ்இ கட்டுப்பாட்டாளரே இதனை நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த புதிய அமைப்பு சரியாகத்தான் செயல்படுகிறது என வலியுறுத்தியுள்ளார். இந்த புகார் விவரம் அம்பலம் ஆன நியைில் சிபிஎஸ்இ ஓஎஸ்எம் அமைப்புக்கு ஆதரவாக வீடியோக்களைப் பதிவு செய்யுமாறு மண்டல அதிகாரிகள் பள்ளி முதல்வர்களுக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இது தீர்வுக்கான வழிகளை ஆராய்வதற்கு மாறாக மூடி மறைக்கும் செயலையே காட்டுகிறது என்று வேதனை தெரிவிக்கின்றனர் கல்வியாளர்கள்.
டிஜிட்டல் மதிப்பீடு…. இந்தியாவும் உலக நாடுகளும்
டிஜிட்டல் முறையில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் நடைமுறை உலக அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இங்கிலாந்தில் ஏகியூஏ, ஓசிஆர் மற்றும் பியர்சன் எடக்சல் ஆகிய தேர்வு வாரியங்கள் ஓஎஸ்எம் முறையில் தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்கின்றன. ஏகியூஏ, இங்கிலாந்தின் மிகப்பெரிய தேர்வு வாரியங்களில் ஒன்று. ஜிசிஎஸ்இ தேர்வுகளை நடத்துகிறது. ஏசிஆர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய தேர்வு வாரியம். பியர்சன் எடெக்சல், உலகின் மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான பியர்சன் நிறுவனத்தின் தேர்வு வாரியம். இங்கு தொழில்நுட்பம் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. முடிவுகளை ஆசிரியர்கள் எடுக்கின்றனர். ஏஐ தனியாக மதிப்பெண் வழங்குவதில்லை. விரிவான சோதனைகள், தொடர்ச்சியான தரக் கண்காணிப்புக்குப் பிறகே அவை அமல்படுத்தப்பட்டன. பல அடுக்கு கண்காணிப்பு முறை உள்ளது. ஆனால் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஓஎஸ்எம் மதிப்பீட்டு முறை, போதுமான சோதனைகள் மேற்கொள்ளப்படாமல், குறைபாடுகள் சுட்டிக்காட்டியும் களையப்படாமல் செயல்படுத்தியுள்ளதுதான் உச்சபட்ச அவலத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவசர கதியில் நடைமுறை சோதனை எலிகளா மாணவர்கள்?
ஒன்றிய பாஜ ஆட்சிக்கு வந்த 2014ம் ஆண்டிலேயே ஓஎஸ்எம் மதிப்பீட்டு முறையை நடைமுறைப்படுத்த கொள்கை முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஆனால் ஸ்கேன் தொழில்நுட்பம் போதுமானதாக இல்லாததால் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது, விடைத்தாள்களை இதே முறையில் திருத்தம் செய்து முன்னோட்டம் பார்த்தோ, அல்லது படிப்படையாக நடைமுறைப்படுத்தவோ அல்லாமல், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் 40 கோடி ஸ்கேன் செய்யப்பட்ட பக்கங்களைக் கொண்ட 98,66,622 விடைத்தாள்கள் ஒரே நேரத்தில் அவசர கதியில் அறிமுகம் செய்யப்பட்டது. மாணவர்களின் எதிர்காலம் குறித்து ஒன்றிய அரசுக்கு அக்கறை இல்லையா? 17 லட்சம் மாணவர்களை சோதனை எலிகளாக ஒன்றிய பாஜ அரசும் இடைநிலை கல்வி வாரியமும் கருதி விட்டதா என்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
முன்னர் நீட் நேற்று சிபிஎஸ்இ இன்று கியூட்: தொடரும் குளறுபடிகள்
* 2015ம் ஆண்டு நடந்த மருத்துவ படிப்புகளுக்கான ஏஐபிஎம்டி நுழைவு தேர்வின்போது வினாத்தாள் கசிவு, மோசடி புகார்கள் எழுந்தன. பின்னர், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு நடத்தப்பட்டது.
* 2016ம் ஆண்டு முதல் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவு தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த மே 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்விலும் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்கள் எழுந்ததால் தேர்வை தேசியத் தேர்வு முகமை ரத்து செய்தது.
* 2024ம் ஆண்டு நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பிறகு பரிந்துரைத்த 101 சீர்திருத்தங்கள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என விமர்சனம் எழுந்தது. தவறுகளில் இருந்து தேசிய தேர்வு முகமை பாடம் கற்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. தற்போது ஓஎஸ்எம் முறையிலான தேர்வு மதிப்பீட்டில் குளறுபடிகள் அடுத்த சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
* இதுபோல் சில நாள் முன்பு நடந்த இளநிலை பட்டப்பபுக்கான கியூட் தேர்வில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 3,765 தேர்வர்கள் தேர்வெழுத முடியாமல் போனது. இந்த தொடர் சர்ச்சைகள் இந்திய தேர்வு நிர்வாக அமைப்பின் பலவீனங்களை காட்டுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
சிபிஎஸ்இ தேர்வுமுறை ஐமு கூட்டணி – தேஜ கூட்டணி ஓர் ஒப்பீடு
சிபிஎஸ்இ தேர்வு முறையை பொறுத்தவரை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் (2004-2014) சில மதிப்பீடு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
* தொடர்ச்சியான மற்றும் விரிவான மதிப்பீடு அறிமுகம் செய்யப்பட்டது.
* மாணவர்களின் தேர்வு அழுத்தத்தை குறைப்பதில் கவனம் செலுத்தப்பட்டது.
* சில வகுப்புகளில் மதிப்பெண்களுக்கு பதிலாக கிரேடு முறை பயன்படுத்தப்பட்டது.
தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் (2014 முதல்) சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளின் முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டது.
* திறன் அடிப்படையிலான, நிகழ்வு அடிப்படையிலான கேள்விகள் அதிகரிக்கப்பட்டன.
* தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
* டிஜிட்டல் மதிப்பீட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
* 2026 முதல் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அரசின் கொள்கையால் உயர்கல்வி பாதிப்பு
ஓஎஸ்எம் மதிப்பீட்டு முறை குளறுபடியால், இந்த ஆண்டு 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்களின் எண்ணிக்கை வெறும் 5.3% ஆகக் குறைந்துள்ளது. பிளஸ் 2 மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்துத்தான் ஒரு மாணவரின் உயர்கல்வி மற்றும் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. இதில் 75% மதிப்பெண் பெற முடியவில்லை எனில் ஐஐடி, என்ஐடி இரண்டிற்கும் செல்ல முடியாது. அப்படி இருக்க சிபிஎஸ்இ திடீரென விடைத்தாள் திருத்துவதை ஓஎஸ்எம் முறைக்கு மாற்றப் போகிறோம் என ஏன் அறிவித்தார்கள், அதற்காக மதிப்பீட்டாளர்களுக்கு முறையாக பயிற்சி வழங்கப்பட்டதா என பல கேள்விகளை பெற்றோரும், கல்வியாளர்களும் முன்வைக்கின்றனர். அவசர கதியில் அரசு எடுத்த கொள்கை முடிவு மாணவர்களின் உயர்கல்வி கனவை பாழாக்கி விட்டது என்கின்றனர் அவர்கள்.
முறைகேடு நிறுவனத்துக்கு வாய்ப்பு
தவறான விடைத்தாள், மங்கலான, படிக்க முடியாத ஸ்கேன்களை வைத்துதான் ஆசிரியர்கள் மதிப்பீடு செய்துள்ளனர். விடைத்தாளில் பல பக்கங்கள் காணவில்லை. இணையதளங்கள் செயலிழந்தன. தேசிய தேர்ச்சி விகிதம் கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்து விட்டது. இந்த டிஜிட்டல் மதிப்பீட்டுப் பணியை மேற்கொள்வதற்காக ஒப்பந்தம் வழங்கப்பட்ட கோயம்ப் எஜூடெக் என்ற நிறுவனம், இதற்கு முன்பு குளோபரினா டெக்னாலஜிஸ் என்ற பெயரில் இயங்கியபோது, 2019ல் தெலங்கானா மாநிலத் தேர்வு முடிவுகளில் நடந்த பெரும் குளறுபடிகளிலும் சர்ச்சையிலும் சிக்கிய நிறுவனமாகும். இதுபோல் 2023ம் ஆண்டிலும் இதுபோன்ற குளறுபடி நடந்து தேர்வர்களின் தற்கொலைகளுக்கு வழிவகுத்தன. தகுந்த பின்னணிச் சோதனைகள் இன்றி இந்த நிறுவனத்திற்கு ஏன் ஒன்றிய மோடி அரசு ஒப்பந்தம் வழங்கியது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
டெண்டர் விதிகளில் தளர்வு
கடந்த ஆண்டு நவம்பர் 19ம் தேதி நடந்த டெண்டர் குழு கூட்டம் தொடர்பான ஆவணங்களின்படி முதல் டெண்டருக்கு எந்த நிறுவனமும் விண்ணப்பிக்கவில்லை. இரண்டாவது டெண்டரிலும் தொழில்நுட்பத் தகுதி பெற்ற நிறுவனம் எதுவும் இல்லை. 3வது டெண்டர் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் வெளியிடப்பட்டது. அதில் சில முக்கிய தொழில்நுட்ப நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன. அதாவது, ஸ்கேனின் தரம் 300 டிபிஐயில் இருந்து 200 டிபிஐ ஆக குறைக்கப்பட்டது. ரோபோட்டிக் அதிவேக ஸ்கேனர் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கட்டாய நிபந்தனை நீக்கப்பட்டது.
மேலும், ஒரு மென்பொருள் நிறுவனத்தின் தரநிலை, செயல்முறை ஒழுங்கு, திட்ட மேலாண்மை திறன் ஆகியவற்றை அளவிடும் சர்வதேச தரச்சான்றிதழான சிஎம்எம்எஐ 5 (மிக உயர்ந்த தர நிலை) சிஎம்எம்ஐ 3 (அடிப்படை தரநிலை) ஆக குறைக்கப்பட்டது. அதாவது, டெண்டரில் பங்கேற்க வேண்டிய தொழில்நுட்பத் தரத் தகுதியே தளர்த்தப்பட்டு விட்டது. முதல் 2 டெண்டர்கள் தோல்வியடைந்த பிறகு, தொழில்நுட்ப நிபந்தனைகள் தளர்த்தப்பட்ட 3வது டெண்டரில் டிசிஎஸ், கோயம்ப் எஜூடெக் நிறுவனங்கள் தகுதி பெற்றன. ஆனால் குறைந்த விலையை மேற்கோள் காட்டியதால் கோயம்ப் எஜூடெக் என்ற நிறுவனம் ஒப்பந்தத்தைப் பெற்றது.
