இயற்கை நமக்கு கிடைத்த வரம்; நம்முடைய உயிர் மூச்சு. அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம். இயற்கைக்கு மனிதனை போன்று சுயநலமில்லை. அனைத்திலும் பொதுநலம் பார்க்கும் இயற்கையானது நமக்கு காற்று, நீர், உணவு, உடை, உறைவிடம் மற்றும் ஆரோக்கியமான வாழ்வு ஆகிய அனைத்தையும் தந்து வாழ்விக்கிறது. இயற்கையை போற்றி பாதுகாப்பது நமது தலையாய கடமை. இம்மண்ணுலகில் ஓரறிவு மரம், செடி, கொடியில் இருந்து, ஈரறிவு நத்தை, சங்குகளில் இருந்து, மூன்றறிவு பெற்ற எறும்பு, கறையான், அட்டை போன்றவற்றில் இருந்து, நான்கறிவு கொண்ட நண்டு, தும்பி, வண்டில் இருந்து, ஐந்தறிவு உள்ள பறவைகள், விலங்குகளிடம் இருந்து, ஆறறிவு கொண்ட மனிதன் வரை கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே உள்ளன.
மரங்கள் ஒன்றுடன் ஒன்று சண்டைபோட்டு கொள்வதில்லை. மரங்களை சுற்றி செடிகளும், கொடிகளும் பரவி, கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மனிதனுக்கு போதிக்கின்றன. நத்தையும், சங்கும் பொறுமையை பறை சாற்றுகின்றன. எறும்பும், கறையானும் சுறுசுறுப்பையும், சுய உழைப்பையும், வருமுன் காக்கும் புத்திசாலித்தனத்தையும் புடம் போட்டு காட்டுகின்றன. நான்கறிவு கொண்ட நண்டும், தும்பியும் தங்கள் கடமைகளை செவ்வனே செய்கின்றன. பறவையும், விலங்குகளும் நமக்கு எவ்வளவோ பாடங்களை புகட்டுகின்றன. இவை சூழல் மண்டலங்களின் முக்கிய அங்கங்கள். பூச்சிகளை கட்டுப்படுத்துவதிலும், மகரந்த சேர்க்கையாளர்களாகவும், தீவு சூழலியலை பராமரிப்பதிலும் பறவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மழை வரப்போவதை முன்கூட்டடியே தெரிவிக்கும் நடமாடும் வானிலை ஆய்வு மையமே மயில். ‘பறவைகளின் சக்ரவர்த்தி’ கழுகு தனது வேட்டையாடும் உத்தி, தொலைநோக்கு பார்வை, அதீத தன்னம்பிக்கை, மன ஒருமைப்பாடு போன்றவற்றுக்கு சிறந்த உதாரணம். தனது குஞ்சுகள் கூட்டுக்குள் இருக்கும்போதே போராட்ட குணத்தை கற்றுத்தருபவை இவை. புறாக்கள், பார்ப்பதற்கு ஒன்றுபோல இருந்தாலும், தங்கள் துணைகளை தவிர மற்றவற்றுடன் கூடுவதில்லை. கழுகு, பருந்து உட்பட சில பறவைகளும் ஓரிணையாக வாழ்கின்றன. பறவைகளில் காகம் மிகவும் புத்திசாலி. பகிர்ந்துண்டு பல்லுயிர் ஓம்புதலை நமக்கு சுட்டுகின்றன.
விலங்குகளில் நாயின் விசுவாசம், யானைகள், ஓநாய்கள் போன்ற விலங்கினங்கள் கூட்டத்தின் மூத்த வழிகாட்டுதலை மதித்து ஒற்றுமையாக வாழுதல் மிகச்சிறந்த குணங்கள். வாழ்வில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், அமைதியாக, சகிப்புத்தன்மையுடன் கடந்து செல்ல வேண்டும் என்பதை கழுதைகளும், நமது இலக்குகளை அடையும்வரை அடுத்தகட்ட நகர்வுகளை பிறருக்கு தெரியப்படுத்தாமல், பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை சிங்கம், புலிகளும், சுறுசுறுப்பாகவும், சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்தி கொள்ளும் திறனுக்கு குரங்குகளும், விடாமுயற்சி மற்றும் ஒற்றுமை இருந்தால் கடினமான காரியங்களையும் சாதிக்கலாம் என்பதை எறும்புகளும், மனுதனுக்கு போதிக்கின்றன.
ஃபீனிக்ஸ் பறவை தன் சாம்பலில் இருந்து உயிர் பெற்று வளர்ந்திடுமாம். ‘அது போய்விட்டது, இது போய்விட்டது’ என்று புலம்பி பரிதவிக்காதே மனிதா! எல்லாம் போன பின்னாலும், ஏன்? உயிர் வாழும் உடலும் சாம்பலானாலும், நம்பிக்கை மட்டும் இருந்தால் மீண்டும் துளிர்க்கலாம்; தழைத்தும் வளரலாம் என்பதையல்லவா அது மனிதனுக்கு உணர்த்துகிறது. ‘ஐந்தறிவு கொண்ட அத்தனையும் இவ்வுலகில் மனிதனுக்காகவே படைக்கப்பட்டவை’ என்ற கூற்றும் உண்டு. அவற்றை எந்த அளவுக்கு அன்புடன் நேசிக்க வேண்டும் என்று மனிதன் புரிந்துகொண்டு வாழ்ந்தால், இப்பூவுலகே சொர்க்கமாகும். பேராசை, பொறாமை, கோபம், தாழ்வு மனப்பான்மை, சோம்பேறித்தனம் அத்தனையையும் நாம் தூக்கி எறிந்துவிட்டு, பறவைகள், விலங்குகள் உணர்த்தும் பாடங்களின் மூலம் வானம்பாடிகளாய் வாழ்க்கையெனும் வானில் மகிழ்ச்சியுடன் சிறகடித்து பறப்போம்.
ஆறறிவு படைத்த நம்மை இன்பப்படுத்துவது, மகிழ செய்வது, நிம்மதி கொள்ள செய்வது எல்லாமே அந்த ஒன்றில் இருந்து ஐந்து வரை அறிவை கொண்ட அனைத்தும்தானே என்பதை, எப்போதாவது நாம் சிந்திப்பது உண்டா? ஐந்தறிவு கொண்ட பறவைகளும், விலங்குகளும்தானே நம்மனதுக்கு ஆறுதல் அளிக்கின்றன. பறவைகளுக்கும், மரங்களுக்கும் இடையேயுள்ள உறவு அற்புதமானது அல்லவா? தங்கள் எச்சங்கள் மூலம் விதைகளை பரப்பி, மரங்களை வளர்க்க பறவைகள் உதவுகின்றன. அதற்கு நன்றிக்கடனாக பறவைகள் தங்க, தங்கள் கிளைகளை விரிக்கும் மரங்களை என்னவென்று சொல்வது! ஆயிரமாயிரம் கி.மீ.களை கடந்து பறவைகள் வருவதும், பருவகாலம் முடிந்ததும் திரும்பி செல்வதும் விநோதமான விஷயமல்லவா? அவை தங்கி, முட்டையிடும் இடங்களை பார்த்து மகிழ்வதில்தானே நமக்கும் சந்தோஷம்.
அதனால்தான் பறவைகளை போற்றுகிறோம். சிறிய பறவையான சிட்டுக்குருவிக்கும் ‘உலக சிட்டுக்குருவிகள் தினம்’ கொண்டாடுகிறோம். பழசோ, புதுசோ, பறவைகள் மேலுள்ள பாசத்துக்கு என்றைக்கும் குறைவில்லை. ‘பறவையை கண்டான், விமானம் படைத்தான்’. பறவையை பார்த்த மனிதன் ஆகாய விமானத்தை கண்டு பிடித்ததால்தான், இன்றைக்கு உலகத்தின் எந்த பகுதிக்கும், எவரும் சென்று வர முடிகிறது. பல நாடுகளுடன் வாணிப தொடர்பு கொள்ள முடிகிறது. ஒரு நாட்டில் அபரிமிதமாக உற்பத்தியாவதை, அது இல்லாத நாடுகளுக்கு விரைந்து அனுப்ப முடிகிறது. பண்டைய மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். இயற்கை புலன்களுக்கு ஏற்ப வாழும் இடங்களை அமைத்து, அந்தந்த நிலத்திற்கு ஏற்ற தொழிலை செய்து வந்தனர். ஐவகை நிலங்களை 5 திணைகளை கொண்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அமைத்து, அதற்கேற்ற உரிப்பொருள்களையும் உடையவர்களாய் இருந்தனர்.
தொல்காப்பியம் உயிர்களை ஆறு வகையாக குறிப்பிடுகிறது. எல்லா உயிரினங்களும் மதிக்கப்படுவதை பல்வேறு இலக்கியங்களும் பேசுகின்றன. ‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று வள்ளலார் குறிப்பிடுகிறார். பழந்தமிழர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழ்ந்ததால், அது குறித்த கூரிய அறிவை நன்கு பெற்றிருந்தனர். மனிதன் இயங்குவது வாழ்நாள் முழுவதும் இயற்கையில்தான். அவ்வியற்கை இல்லாமல் மனிதனால் இயங்க முடியாது. இயற்கையே உயிரினங்களுக்கு மணிமுடி. அதனால்தான் மனிதர்கள் இயற்கையை போற்றுவதை வழக்கமாக்கி கொண்டனர். உலக வயதின் காலக்கணிப்பில், மற்ற உயிர்வகைகளை ஒப்பிட்டால், மனித இனம் தவழ்ந்திடும் மழலைதான். ஆனால், மனித இனம் அளவு கடந்த அறிவாற்றலால், மலைகளை பெயர்த்திடவும், நதிகளை நகர்த்திடவும், உயிர் செல்களினுள் ஊடுருவி, அவைகளை உருமாற்றம் அடைய செய்யவும் ஆற்றல் பல பெற்றுள்ளது.
இதே ஆக்க அறிவு, பல தாக்கங்களை பாரில் உள்ள பல்லுயிரின் பாலும் பாராமுகமாக பரப்பி கொண்டே உள்ளது. இப்பூவுலகில் தாவரங்கள், பறவைகள், விலங்குகள் இன்றேல் மனிதன் வாழ இயலாது. ஏன்? நுண்ணுயிர் வகைகள் இன்றேலும் மனிதன் வாழ இயலாது. ஆனால், மனிதன் என்ற இனம் இவ்வுலகத்தில் இல்லாவிட்டால், மற்ற உயிர் வகைகள் நிச்சயமாக மிக மகிழ்வாக தழைத்தோங்கி வாழ இயலும். எனவே, மனித இனம் இவ்வுலகில் ஓர் இன்றியமையாத அங்கமன்று. மனித இனம் இயற்கை என்ற சிலந்தி வலையில் ஓர் இழை. இவ்விழை தனித்து இருக்க முடியாது. பிரிந்தால் பஞ்சுபோல் பறந்து விடும். எனவேதான், நமது வளமான வாழ்வு, மற்ற உயிர் வகைகளின் நலமான வாழ்வுடன் பின்னி பிணைந்துள்ளது. பல்லுயிர் ஓம்பல், மலைகள் நலம், மக்களின் வளம், அனைத்து உயிர்வகைகளின் மகிழ்வான வாழ்வுதான், மனித இனத்தின் நலமான, வளமான வாழ்வுக்கு ஆதாரம். எனவே, பல்லுயிர்களும் பரவலாக வாழும் மலைப்பகுதிகள், வனப்பகுதிகளிலேயே இவைகளின் மகிழ்வான வாழ்வை உறுதி செய்திடும் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.
மகரந்த சேர்க்கை, விதைகள் பரவுதல் போன்ற இயற்கை பணிகளை அனுதினமும் செய்து வரும் பறவைகள், பட்டாம்பூச்சி போன்ற உயிரினங்கள், பறவைகள் போன்ற விதைபரப்பும் உயிரினங்களுக்கு ஆண்டு முழுவதும் தேவையான அளவுக்கு, விருப்பமான உணவு தரும் மரவகைகளை கண்டறிய வேண்டும். தமிழக கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொழில்நுட்ப அறிவுடன் திட்டம் தீட்டி இவற்றை வளர்க்க வேண்டும். இதனால் மலைகளின் நலம் பெருகும்; பல லட்சக்கணக்கான இளம் தாவரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மழைநீரை உறிஞ்சி வைத்து, சுனை நீராக மாற்றிடும் மலைகளின் மறைந்து போன மாபெரும் திறன் மீண்டும் மீண்டு வரும். இதனால் சமவெளிகளில் நீர்வள ஆதாரம் பெருகும். எனவே நீர் உயரும்.
இந்நிகழ்வுகளின் தொடர்ச்சியானது இளம் தாவரங்களின் இலைப்பசுமை, காற்றிலுள்ள கரியமில வாயுவை இருமடங்கு அதிகளவில் கிரகித்து தன்னகப்படுத்தும். அதிக அளவு பிராணவாயுவை வெளிவிட்டு, உலகம் வெப்பமாவதை குறைத்திடும். ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே வரும் வெப்பத்தால் வட, தென் துருவ பனிப்பாறைகளும், இமயமலை போன்ற நெடிதுயர்ந்த மலைப்பகுதியில் அடர்ந்து, படர்ந்து படிந்துள்ள பனிக்கட்டிகளும், மிக வேகமாக உருகி கரைந்து குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கடல்மட்டம் உயர்ந்து, கடற்கரை பகுதிகளில் பெருமளவு கடல்கொள்ளும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க தேவைப்படும் எரிசக்தி, மின்சக்திக்காக நிலக்கரி, பெட்ரோல், டீசல் போன்றவற்றை தொடர்ந்து அதிகளவில் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதில் அதிகளவு கரியமிலவாயு வெளிப்படுதலை குறைக்க இயலாது. ஆனால், இயற்கை வளங்களான தாவரங்களை கொண்டு அந்த சாதனையை நிகழ்த்த அதிகளவு வாய்ப்புள்ளது. பொய்த்து வரும், மாறிவரும் பருவமழையையும், தொடர்ந்து வரும் வறட்சி, வளமிழக்கும் மண் போன்ற சோதனைகளை தாங்கி, சாதனை புரியவல்ல தன்மையை தன்னகத்தே கொண்டுள்ளவை மரவகைகளே. இயற்கையே நமது எதிர்காலம் என்ற மாபெரும் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். இன்றைய தலைமுறையினர் இயற்கை வளங்களின் பாதுகாவலர்களாக மாற வேண்டும். நம் வருங்கால சந்ததிகள் மற்றும் அனைத்து உயிர்வகைகளின் வளமான வாழ்வுக்கு அடிப்படையாக விளங்குதற்குரிய செயல்களில் ஈடுபட வேண்டும். அறிவியல், தொழில்நுட்ப கூரறிவுடன் தமிழகத்துக்கு தகுந்த இயற்கை மேம்பாட்டு திட்டங்கள் தீட்டப்பட்டு நிறைவேற்றினால், அனைத்து உயிர்களின் வாழ்வும் வளம் பெருகும்.
இயற்கையை அழித்தால் விபரீதம்…
பிரபஞ்சத்தில் எண்ணற்ற கிரகங்கள் இருந்தாலும், மனிதனும், மற்றை உயிரினங்களும் வாழ்வதற்கு தேவையான இயற்கை வளங்கள் நிறைந்தது பூமி மட்டுமே. தன்னைத்தானே சமநிலை செய்துகொள்ளும் இயற்கையின் ஒழுங்கமைவை மனித இனம் இப்போது குலைத்து புவியை வருங்காலங்களில் உயிர் வாழ்வதற்கு தகுதியற்றதாக செய்து வருகிறது. வளர்ச்சி என்ற பெயரில் இயற்கைக்கு நாம் ஏற்படுத்திய கொடூர காயங்களின் ஆழமான வடுக்கள் இன்று மனிதனுடைய வாழ்வாதாரத்தை கேள்வி குறியாக்கி உள்ளன.
வரலாறு இதுவரை கண்டிராத வேகத்தில் உலகின் இயற்கை வளங்கள், பல்லுயிர்கள் அழிந்துகொண்டு வருகின்றன. நிலம், ஆகாயம், கடல் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து பூமியை அழிவின் விளிம்புக்கு தள்ளியுள்ளன. இதனால் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அழிவுநிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டுள்ளது பூமி. இயற்கையை நாம் அழித்தால் அது நம்மை நசுக்கிவிடும். இயற்கையின் பல்வேறு சீற்றங்களால் ஏற்பட்டு வரும் அழிவுகள் இதை நமக்கு நினைவூட்டி வருகின்றன. நாம் திருந்தும் நாள் எந்நாளோ?
