கால்வாய்களில் சேகரமாகும் பிளாஸ்டிக் குப்பைகளால் மழைநீர் செல்வதில் சிக்கல்

ஊட்டி,ஜூன்2: ஊட்டி-குன்னூர் சாலையில் உள்ள பல்வேறு மழை நீர் கால்வாய்களில் குப்பைகள் நிறைந்து காணப்படுவதால் மழை காலங்களில் சாலை சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி,கூடலூர் வழியாக மைசூர் வரையுள்ள சாலை தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஊட்டிக்கு சுற்றுலா வரக்கூடிய சுற்றுலா பயணிகள், உள்ளூர் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் ஊட்டி – குன்னூர் இடையே உள்ள இச்சாலையில் பல இடங்களில் வேலிவியூ,மந்தாடா,எல்லநள்ளி உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழைநீர் வழிந்தோட வசதியாக சாலைக்கு அடியில் மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மண் நிரம்பியும்,குப்பைகள் நிரம்பியும் காணப்படுகின்றன. குறிப்பாக பொதுமக்கள்,சுற்றுலா பயணிகள் வீசி எறிய கூடிய பிளாஸ்டிக் குப்பைகள் அதிகளவு உள்ளன. இதனால் கழிவுநீர்,மழைநீர் போன்றவைகள் செல்ல முடிவதில்லை. இதனால் மழைநீர் சாலையில் வழிந்தோடும் நிலை உள்ளது.இதனால் சாலை சேதமடையும் அபாயம் உள்ளது.இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பருவமழை துவங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக இச்சாலையில் உள்ள கால்வாய்கள், மோரிகள் உள்ளிட்டவற்றை தேசிய நெடுஞ்சாலைத்துறை தூர்வாறி சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: