ஊட்டி, ஜூலை 30: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இருந்தபோதிலும், கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதனால், சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக தாவரவியல் பூங்காவில் கோடை காலத்தின்போது மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்காக பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அதில் மலர்கள் பூத்துக் குலுங்கும். அதேபோல் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் பல்வேவேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அந்த தொட்டிகள் மாடங்களிலும், புல் மைதானங்களிலும் அலங்கரித்து வைக்கப்படும்.
இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். அதேபோல் இரண்டாம் சீசன் சமயங்களில் மலர்க்கண்காட்சி நடத்தாவிட்டாலும் பூங்கா முழுவதிலும் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக் குலுங்கும். 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்து காணப்படும். இதனை மாடங்களில் அலங்கரித்து வைப்பது வாடிக்கை. தற்போது இரண்டாம் சீசனுக்காக தற்போது பூங்காவை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூங்காவில் நாற்று உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால், பூங்கா மலர்கள் இன்றி காட்சியளிக்கிறது.
கண்ணாடி மாளிகையில் மட்டுமே ஒரு சில மலர்கள் உள்ளன. பூங்காவில் மலர்கள் இல்லாத நிலையில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், இத்தாலியன் பூங்கா, பூங்கா அலுவலகம் அருகே உள்ள செல்பி ஸ்பாட்டுகளில் அலங்கார செடிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மலர்கள் இல்லாதபோதிலும், இந்த அலங்கார செடிகள் அழகாக காட்சி அளிக்கும் நிலையில் இதன் அருகே நின்று சுற்றுலா பயணிகள் போட்டோக்கள் எடுத்து மகிழ்கின்றனர்.
