பருவமழை ஏமாற்றி வரும் நிலையில் மைக்ரோ ஸ்பிரிங்லர் பாசன முறையை பின்பற்றும் விவசாயிகள்

 

ஊட்டி, ஜூலை 30:நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை காரணமாக தேயிலை, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் போன்ற மலைப்பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை மூலம் ஆண்டின் ஆறு மாதங்களுக்கு இங்கு தடையின்றி மழைப்பொழிவு கிடைக்கும். இதனை பயன்படுத்தி மலைக்காய்கறி விவசாயம் நடைபெறும். ஆனால், தற்போது புவி வெப்பமயமாதல் மற்றும் தீவிர பருவநிலை மாற்றம் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொழிவில் மாறுபாடுகள் உள்ளன. சில சமயங்களில் குறைந்த நாட்களில் அதிக மழை, சில சமயங்களில் கடுமையான வறட்சியான காலநிலை நிலவுகிறது. இந்த சூழலில், தற்போது எல்-நினோ தாக்கம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றி வருகிறது.

எந்த ஆண்டிலும் இல்லாத அளவாக 50 சதவீதத்திற்கும் மேலாக மழை பற்றாக்குறையாக மழை பெய்துள்ளது. மழையில்லாத காலங்களில் நீர் ஆதாரங்கள் உள்ள பகுதிகளில் இருந்து மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் எடுத்து விளை நிலங்களுக்குப் பாய்ச்ச வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. சமீபகாலமாக நிலவும் சீரற்ற வானிலை மற்றும் நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள, பாரம்பரிய பாசன முறைகளுக்கு மாற்றாக நுண்ணீர் பாசன முறைகளை நோக்கி விவசாயிகள் மாறி வருகின்றனர். மைக்ரோ ஸ்பிரிங்லர் பயன்படுத்துவதால் குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தி பயிர்களுக்குத் தேவையான ஈரப்பதத்தை சீராக வழங்க முடிகிறது.

தண்ணீர் வீணாகாமல் பயிர்களின் வேர் மற்றும் இலைப்பகுதிகளுக்குச் சென்று சேர்வதால், பயிர்களின் வளர்ச்சி சீராகி விளைச்சல் அதிகரிக்கிறது. மலைப் பிரதேசங்களில் தெளிப்பு நீர் முறையில் பாசனம் செய்வதால் மண் அரிப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. தோட்டக்கலைத் துறை வழங்கும் மானிய உதவிகளைப் பயன்படுத்தி, ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏராளமான விவசாயிகள் இந்த தொழில்நுட்பத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகின்றனர். குறைந்த நீரைக் கொண்டு அதிக சாகுபடி செய்து லாபம் ஈட்டும் இந்த முறை, விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நுண்ணீர் பாசனத்தால் பெருமளவில் தண்ணீர் மிச்சமாவதுடன், காய்கறிகளின் மகசூலும் கணிசமாக அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘நஞ்சநாடு, முத்தோரை, பாலாடா, கப்பத்தொரை, கேத்தி பாலாடா ஆகிய பகுதிகள்தான் மலைக்காய்கறி விவசாயத்தின் மையப் பகுதிகள் ஆகும். இங்கு ஆண்டுக்கு மூன்று போகம் சாகுபடி செய்யப்படுகிறது. குளிர்காலத்தில் கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் பயிர்கள் கருகும் அபாயம் உண்டு. இந்த இக்கட்டான சூழலில், நுண்ணீர் பாசனக் கருவிகள் மூலம் குறைந்த நீரைக் கொண்டு எங்களால் வெற்றிகரமாக விவசாயம் செய்ய முடிகிறது. அணிக்கொரை, எப்பநாடு, தூனேரி. கூக்கல்தொரை போன்ற மழைப்பொழிவு குறைந்த பகுதிகளில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் காய்கறி சாகுபடிக்கு இந்த நுண்ணீர் பாசனமுறைதான் தற்போது கைகொடுத்து வருகிறது’’ என்றனர்.

Related Stories: