இம்பால்: மணிப்பூரில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் 5 குடிசை வீடுகளை தீ வைத்து எரித்தனர். மணிப்பூரில் மெய்டீஸ் இனத்தை சேர்ந்த கெம்சந்த் சிங் தலைமையிலான பாஜ ஆட்சி செய்து வருகிறது. இங்கு கடந்த ஆட்சியை போலவே தற்போதும் இனவன்முறை சம்பவங்கள் தொடர்கதையாக நீடிக்கின்றன. நடப்பாண்டில் பிப்ரவரி முதல் நாகா, குக்கி மற்றும் குகி சோ பழங்குடியினங்களை சேர்ந்த ஆயுதமேந்திய நபர்கள் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம், காங்போக்பி மாவட்டத்தில் குக்கி சோ இன மக்கள் அதிகம் வசிக்கும் கரம் வைபே கிராமத்துக்குள் நுழைந்த ஆயுதமேந்திய மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். மேலும் அங்கிருந்த 5 குடிசை வீடுகளை தீ வைத்து எரித்தனர். ஆனால் இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. இந்த சம்பவத்துக்கு குக்கி இன்பி மணிப்பூர் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.
