ஆபத்து 9 மடங்கு அதிகரிப்பு குழந்தைகளை அதிகம் கவரும் புதிய புகையிலை தயாரிப்புகள்: உலக புகையிலை ஒழிப்பு தினத்தில் நிபுணர்கள் எச்சரிக்கை

புதுடெல்லி: புதிய புகையிலை மற்றும் நிக்கோட்டின் தயாரிப்புகளால் குழந்தைகள் 9 மடங்கு அதிகமாக ஈர்க்கப்படுவதாக உலக புகையிலை ஒழிப்பு தினமான நேற்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உலக புகையிலை ஒழிப்பு தினம் நேற்று உலகம் முழுக்க கடைபிடிக்கப்பட்டது. இந்தியாவில், புகையிலை மற்றும் நிக்கோட்டின் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், புகையிலை மற்றும் நிக்கோட்டின் தொழில்துறை, தனது தயாரிப்புகளை கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்காக, சுவையூட்டிகள், நேர்த்தியான வடிவமைப்புகள், டிஜிட்டல் விளம்பரங்கள் மற்றும் பிற தந்திரங்களை அதிகளவில் பயன்படுத்துகிறது என்றும், இது புதிய தலைமுறையினரை குறிப்பாக குழந்தைகளை நிக்கோட்டினுக்கு அடிமையாக்கிவிடும் என்ற கவலைகளை ஏற்படுத்தியிருப்பதாகவும் நிபுணர்கள் கூறி உள்ளனர்.

முன்னாள் என்சிஇஆர்டி இயக்குநர் பேராசிரியர் ஜே.பி.எஸ். ராஜ்புத் கூறுகையில், ‘‘புதிய புகையிலை மற்றும் நிக்கோட்டின் தயாரிப்புகளால் குழந்தைகள் 9 மடங்கு அதிகமாக ஈர்க்கப்படுகிறார்கள் என்ற உலக சுகாதார அமைப்பின் கண்டுபிடிப்பு, சமூகத்திற்கு ஒரு எச்சரிக்கை மணி. இந்த போராட்டத்தை நாம் சுகாதார அதிகாரிகளிடம் மட்டும் விட்டுவிட முடியாது.

குழந்தைகள் சூழ்ச்சிகளை அடையாளம் காணவும், சக நண்பர்களின் அழுத்தத்தை எதிர்க்கவும், தமக்கான தேர்வுகளை மேற்கொள்ளவும் உதவுவதில் பள்ளிகள், பெற்றோர்கள் மற்றும் சமூகங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு’’ என்றார். உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, உலகளவில் 13-15 வயதுக்குட்பட்ட 4 கோடி குழந்தைகள் தற்போது குறைந்தபட்சம் ஒரு புகையிலைப் பொருளையாவது பயன்படுத்துகின்றனர். அதே வயதுப் பிரிவில் உள்ள 1.5 கோடிக்கும் அதிகமான இளம் பருவத்தினர் மின்னணு சிகரெட்டுகளைப் பயன்படுத்துகின்றனர்.

டெல்லியில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவத்தின் முன்னாள் தலைவர் அலோக் தாக்கர் கூறுகையில், ‘‘மிகவும் வெற்றிகரமான புற்றுநோய் சிகிச்சை என்பது, ஒருபோதும் ஏற்படாத புற்றுநோயே ஆகும். இன்று புகையிலை அடிமைத்தனத்திலிருந்து பாதுகாக்கப்படும் ஒவ்வொரு குழந்தையும், இந்தியாவுக்கான ஒரு ஆரோக்கியமான எதிர்காலத்தைப் பிரதிபலிக்கிறது’’ என்றார்.

* இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புகையிலை பயன்பாட்டினால் கிட்டத்தட்ட 13.5 லட்சம் இறப்புகள் ஏற்படுகின்றன.

* புகையிலைப் பயன்பாட்டினால் ஏற்படும் பொருளாதாரச் சுமை ரூ. 100 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் மதிப்பிட்டுள்ளன.

* இது, ஆண்டுதோறும் ரூ.1.77 லட்சம் கோடிக்கு சுகாதார செலவுகளையும், உற்பத்தித்திறன் இழப்புகளையும் ஏற்படுத்துகிறது.

Related Stories: