சென்னை: திமுகவுக்கு எதிராக விமர்சனம் செய்தது தேவையற்றது; விசிகவினர் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும், என தொண்டர்களுக்கு அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் எம்பி வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: தவெக தனிப்பெரும் கட்சி என்ற இடத்தை பிடித்தது. ஆட்சியமைக்க கூடுதலாக 11 இடங்கள் தேவைப்பட்டன.
குடியரசுத் தலைவர் ஆட்சியை திணித்துவிடக் கூடாது, மறு தேர்தல் வந்து விடக்கூடாது என்பதற்காக தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ், இடதுசாரிகள், ஐயூஎம்எல் மற்றும் விசிக கட்சிகள் ஆதரவளித்தன. அமைச்சரவையில் சேரவேண்டும் என உயர்நிலைக்குழுவில் முடிவெடுத்தனர். பொதுச்செயலாளர்களுடன் ஆலோசித்து வெளியில் இருந்து ஆதரிக்க முடிவெடுத்தோம். ஆனால், முதல்வராக, துணை முதல்வராக திருமாவளவன் பேரம் பேசுகிறார் என அவதூறு பரப்பப்பட்டது. இப்போது ஆ.ராசா நாம் எடுத்த முடிவை விமர்சனம் செய்திருந்தார்.
தவெகவுக்கு ஆதரவு அளிக்கும்போது, ஸ்டாலினை சந்தித்து, இடதுசாரிகளின் முடிவின் அடிப்படையில் ஆதரவு வழங்குவதாக தெரிவித்தேன். நீங்கள் ஆதரவு நல்கலாம் என இசைவு தெரிவித்தார். ஆனால், அமைச்சரவையில் இடம்பெறும் முடிவை ஸ்டாலினிடம் சொல்ல முடியவில்லை. ஆனால், முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் சொல்லிவிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டேன். திமுகவுக்கு எதிராக விமர்சனம் செய்வது, போராட்டத்தில் ஈடுபடுவது தேவையற்றது. விசிகவினர் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடவேண்டும்.
ஆதவ் அர்ஜூனாவோடு சேர்ந்து சதி செய்தோம் எனச் சொல்கிறார்கள். திமுக கூட்டணியை கட்டுக்கோப்பாக வைக்கவேண்டும் என்பதில் எவ்வளவு உறுதுணையாக இருந்தோம் என்பது ஸ்டாலினுக்கு தெரியும். இந்த தேர்தலில் அனைத்து தரப்பு வாக்குகளும் சிதறியது உண்மை. ஆனால், விசிகவுக்கான தலித் வாக்குகள் மட்டுமே சிதறியதால் தான் திமுக தோல்வியடைந்ததாக சொல்கிறார்கள்.
பாஜ 9 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 4 சதவீத வாக்குகளையும் இழந்துள்ளது. திமுக, அதிமுகவின் நிலையான வாக்கு வங்கி சரிந்துள்ளது. இதெல்லாம் தலித் வாக்குகளா. ஆனால் விசிகவுக்கு தான் இழப்பு ஏற்பட்டுள்ளது, தலித் வாக்கு வங்கி மட்டும் சரிந்துள்ளதாக அவதூறு பரப்புகிறார்கள். இவ்வாறு திருமா வளவன் கூறியுள்ளார்.
