பல்கலை வேந்தர் விவகாரம் உயர்கல்வி துறை அமைச்சர் பேச்சு மாநில உரிமைகளுக்கு எதிரானது: தலைவர்கள் கண்டனம்

சென்னை: மாநில பல்கலைக் கழகங்களின் வேந்தராக ஆளுநருக்கு பதிலாக மாநில முதல்வர் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு சட்டமன்றத்தில், கடந்த ஆட்சியின் போது மசோதா நிறைவேற்றப்பட்டது. அதை அன்றைய ஆளுநர் கிடப்பில் போட்டார். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அன்றைய திமுக அரசு வழக்கு தொடுத்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அந்த மசோதா சட்டமானது. அதை தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், முந்தைய திமுக அரசின் நிலைப்பாட்டை அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும், முதலமைச்சர் விஜய் இதுகுறித்து முடிவு எடுப்பார் என்றும் மதுரையில் உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி அளித்திருந்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக துணை பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரை நியமிக்கும் சட்டம், கடந்த திமுக அரசால் சட்ட போராட்டம் நடத்தி பெறப்பட்டது. புதியதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் உயர்கல்வித் துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான விஸ்வநாதன் “ஆளுனரே பல்கலைக் கழக வேந்தராக நீடிக்கலாம்” என்று கருத்து தெரிவித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

மேலும் இது மாநில உரிமைகளுக்கு எதிரானது. ஒன்றிய பாஜ அரசால் நியமிக்கப்பட்ட ஆளுனரே பல்கலைக்கழக வேந்தராக தொடரலாம், என்று பாஜவுக்கு ஒத்து ஊதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதனின் கருத்து பாஜ அரசின் அடிவருடியாக காங்கிரஸ் மாறிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இச்சட்டம் நிறைவேறுவதற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவரே இன்றைக்கு அதற்கு எதிராக பேசுவது என்பது பதவி சுகத்துக்காக காங்கிரஸ் கட்சி தனது கொள்கையை மாற்றிக் கொண்டதாக தெரிகிறது. இதை திமுக சார்பில் நான் கடுமையாக கண்டிக்கிறேன்.

விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார்: பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்கவேண்டும் என்ற முந்தைய அரசின் நிலைபாட்டைப் பின்பற்றவேண்டியதில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பது மாநில உரிமைகளுக்காகத் தமிழ்நாடு போராடிப் பெற்றதைக் கைவிடுவது மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் அவமதிப்பதாகும். உயர்கல்வித்துறை அமைச்சர் இதை முதலமைச்சர் ஒப்புதலோடுதான் சொல்கிறாரா.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: சட்டப்போராட்டத்தின் மூலம் பெறப்பட்ட இந்த மாநில உரிமையை, தற்போது பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர், முந்தைய அரசின் நிலைபாட்டை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என கூறியுள்ளார். அவரது இக்கருத்து ஒன்றிய பாஜ அரசின் மாநில உரிமைப் பறிப்பிற்கு வலுசேர்க்கிறது. எனவே அவர் தனது தவறான கருத்தியல் நிலைபாட்டை கைவிட வேண்டும்.

* நான் அப்படி சொல்லல அமைச்சர் விஸ்வநாதன் மழுப்பல்
பல்கலைக்கழக வேந்தர் விவகாரத்துக்கு கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், தற்போதுள்ள நிலை குறித்து எந்த கருத்தும் நான் கூறவில்லை என்று அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பல்கலைக் கழகங்களில் வேந்தர்களாக முதல்வர் பொறுப்பேற்பது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு தமிழக முதல்வர் விஜய் உரிய நேரத்தில் கொள்கை முடிவு எடுப்பார் என்று தான் கூறினேன்.

தற்போதுள்ள நிலை குறித்து நான் எந்த கருத்தும் கூறாதபோது அதற்கு மாறாக செய்தி வெளிவந்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். மாநில உரிமைகளை பறிக்கிற வகையில் எனது கருத்து அமைந்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானது. அதுமாதிரி எந்த கருத்தும் கூறாத போது இத்தகைய வாதங்களை முன்வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும் என்றார்.

Related Stories: