சென்னை: வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நிர்வாகத்தினை செயல்படுத்திட வேண்டும் என்று பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி அனைத்து அலுவலர்களையும் வலியுறுத்தினார். பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறையின் நிர்வாக பிரிவு, நிதி பிரிவு, விற்பனை பிரிவு, திட்டமிடுதல் பிரிவு, கொள்முதல் பிரிவு, பொறியியல் பிரிவு, தர உறுதி பிரிவு, அம்பத்தூர் சோழிங்கநல்லூர் மற்றும் மாதவரம் பால் பண்ணை உள்ளிட்ட இதர பிரிவுகளை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் விஜயலட்சுமி பேசுகையில், ‘‘மாநிலத்தின் பால் உற்பத்தி, பால் கொள்முதல், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் செயல்பாடுகள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் செயல்பாடுகள், பால் கூட்டுறவு நிறுவனங்களின் உள்கட்டமைப்பு செயல்பாடுகள், பணியாளர்களுக்கு செயல்பாட்டில் உள்ள திட்டங்கள், கூட்டுறவு சங்க பால் உற்பத்தியாளர்களுக்கான நலத்திட்டங்கள், பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை, கால்நடை பராமரிப்பிற்கான தரமான தீவனங்கள், தூய பால் உற்பத்தி மற்றும் பால்வளத்துறையின் தற்போது நடைபெற்று வரும் திட்ட பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், எந்தெந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசனை வழங்கினார். பால் உற்பத்தியாளர்களின் நலன் சார்ந்த பணிகள் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நிர்வாகத்தை செயல்படுத்த வேண்டும், என அலுவலர்களிடம் வலியுறுத்தினார்.
கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர்
அனு ஜார்ஜ், பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஜான் லூயிஸ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் இணை மேலாண்மை இயக்குநர் கவிதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
