காரைக்கால்: திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ விழா தேரோட்டம் இன்று நடந்தது. காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் தர்பாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் தனி சன்னதியில் சனி பகவான் அருள்பாலித்து வருகிறார். இங்கு இந்தாண்டு பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் கடந்த 13ம் தேதி தொடங்கியது. தினமும் விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் அம்பாள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா, தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை உடனுறை தர்பாரண்யேஸ்வரர் சுவாமி வீதியுலா நடந்து வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதையொட்டி நேற்றிரவு செண்பக தியாகராஜ சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இன்று காலை தேரில் செண்பக தியாகராஜ சுவாமி எழுந்தருளினார். தனித்தனி தேர்களில் நீலோத் பாலாம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் எழுந்தருளினர்.
இதைதொடர்ந்து தருமபுர ஆதீன கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமி மற்றும் அதிகாரிகள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா… தியாகேசா தியாகேசா… என்று முழக்கமிட்டவாறு திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். வடக்கு வீதி, தெற்கு வீதி, கிழக்கு வீதி, மேற்கு வீதிகளில் தேர் வலம் வந்தது. இன்று மாலை தேர் நிலையை அடைகிறது. நாளை (28ம் தேதி) இரவு சனி பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலாவும், நாளை மறுநாள் தெப்போற்சவமும் நடக்கிறது. காரைக்கால் எஸ்எஸ்பி நித்யா ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
