இலாகா ஒதுக்காமல் காலதாமதம்; ரங்கசாமியுடன் நமச்சிவாயம் திடீர் மோதல்: கவர்னருக்கு பாஜ புதிய அசைன்மென்ட்

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி 18 இடங்களை கைப்பற்றி ஆட்சியமைத்துள்ளது. இதையடுத்து கடந்த 13ம் தேதி 5வது முறையாக முதல்வராக ரங்கசாமி பதவியேற்றுக்கொண்டார். அவருடன் அமைச்சர்களாக நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் பதவியேற்றனர். தொடர்ந்து 18ம் தேதி தற்காலிக சபாநாயகர் அன்பழகன் முன்னிலையில் 28 எம்எல்ஏக்கள் பதவியேற்றனர்.

இந்நிலையில் 2 வாரங்களை கடந்தும் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கி தருவது தொடர்பாக முதல்வர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் 3 அமைச்சர்கள் நியமனம், சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிகளில் பாஜவுக்கு எத்தனை பதவிகள் என்பது குறித்தும் முதல்வர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அவரிடம் தேர்தல் பொறுப்பாளர் மண்சுக் மாண்டவியா ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவர் சரியான பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இன்னும் நேரம் இருக்கிறது பிறகு பேசிக்கொள்ளலாம் என தட்டிக் கழித்துள்ளார்.

இதற்கிடையே அமைச்சராக பொறுப்பேற்று கொண்ட நமச்சிவாயம், டெல்லி சென்று பாஜ தேசிய தலைவர் நிதின் நபின், அமைப்பு செயலாளர் சந்தோஷ், ஒன்றிய அமைச்சர் மண்சுக் மாண்டவியா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது இலாகா ஒதுக்கி தருவது, பாஜவுக்கு மேலும் ஒரு அமைச்சர், கடந்த முறையை போல இந்த முறையும் சபாநாயகர் பதவியை கேட்டுப்பெறுவது போன்ற கோரிக்கைகள் பாஜ தேசிய தலைமையிடம் முன் வைக்கப்பட்டது. ஆனால், ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் இனி கெஞ்சிக்கொண்டிருக்க முடியாது. கொடுத்தால் கொடுக்கட்டும். எப்போது கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர். மேலும் நம்முடைய கருத்துகளை ரங்கசாமியிடம் தெரிவித்துவிட்டோம்.

இனி அவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என பாஜ தலைமை தெரிவித்திருக்கிறது. மேலும் ஒரு ஒன்றிய அமைச்சர், எத்தனை முறை ரங்கசாமியிடம் இலாகா குறித்து விரைந்து முடிவு எடுங்கள் என தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்க முடியும். வேண்டுமானால் கவர்னரிடம் இப்பணியை ஒப்படைக்கிறோம். அவர் ரங்கசாமியிடம் பேசி மற்ற முடிவுகளை எடுப்பார் என தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற சூழலில் நேற்று மதியம் கவர்னரை அமைச்சர் நமச்சிவாயம் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இலாகா ஒதுக்குவது, மேலும் பாஜவுக்கு கூடுதலாக ஒரு அமைச்சரை நியமனம் செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. முதல்வரிடம் பேசிவிட்டு, பதில் சொல்வதாக கவர்னர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையிலே தொடர்ந்து நிருபர்களை சந்தித்த நமச்சிவாயம், எந்த இலாகா கொடுத்தாலும் வாங்கி கொள்வேன் என கூறியுள்ளார். கட்சி மேலிடத்துக்கு கட்டுப்பட்டு நமச்சிவாயம் இவ்வாறு கூறியிருந்தாலும் முதல்வரின் செயல்பாடு நமச்சிவாயம் ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாஜவின் கருத்துக்கு ரங்கசாமி செவி சாய்க்காத நிலையில், கோபமடைந்த பாஜ மேலிடம், கவர்னர் மூலம் ரங்கசாமியை வழிக்கு கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. இதுபோன்ற காரணங்களால் கடந்த ஐந்தாண்டுகளைபோல், முதல்வருடன் பாஜ இணக்கமாக செல்லும் வாய்ப்பு குறைந்திருப்பதாக தெரிகிறது.

Related Stories: