×

CBSE பள்ளிகளில் இந்த கல்வியாண்டிலிருந்தே மும்மொழி கொள்கை – அண்ணாமலை திடீர் எதிர்ப்பு

சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி கல்வி கட்டாயம் என்ற அறிவிப்பிற்கு எதிராக கருத்து தெரிவித்து உள்ளார். முன்னதாக கடந்த 2026-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்று CBSE அறிவித்தது.

இந்த முடிவை வரவேற்றவர்களில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் ஒருவர். கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், 9-ஆம் வகுப்பு CBSE மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்குவது, இன்றிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் சமீபத்தில் (மே 15, 2026) CBSE அனைத்து இணைப்பு பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில், இந்தக் கல்வியாண்டிலிருந்தே 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம், 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்ற தனது முந்தைய அறிவிப்பை CBSE மீறியிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, CBSE-ன் இந்த திடீர் அறிவிப்பு, பெற்றோர்களுக்கு, குறிப்பாகத் தமிழக மாணவர்களின் பெற்றோர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.

தமிழக குழந்தைகள் ஏற்கனவே ஆறாம் வகுப்பிலேயே தாங்கள் விரும்பிய மொழியைத் தேர்வு செய்துள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பின் படி, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளை கட்டாயமாக கற்க வேண்டும் என்றும், அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் CBSE தனது சமீபத்திய சுற்றறிக்கையில் கூறியுள்ளது. அதுவும் இது நடப்பு கல்வியாண்டு 2026 ஜூலை 1 முதலே அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மிகவும் குறுகிய காலத்திற்குள் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றொரு புதிய மொழியைக் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, குழந்தைகளுக்கு தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களின் மொத்தக் கல்வித் திறனையும் பாதிக்க செய்யும். எனவே இந்த புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அண்ணாமலை கேட்டு கொண்டுள்ளார். மேலும் முன்பே அறிவித்தபடி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மும்மொழி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.

Tags : CBSE ,ANNAMALAI ,Chennai ,BJP ,
× RELATED நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு...