சென்னை: நேற்று மூன்று அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, உடனடியாக தவெக-வில் இணைந்த நிலையில் இன்று மற்றொரு அதிமுக எம்எல்ஏ-வான இசக்கி சுப்பையாவும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.
இதற்காக தலைமை செயலகம் வந்த அம்பாசமுத்திரம் தொகுதி மக்களால் அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இசக்கி சுப்பையா, தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரை நேரில் சந்தித்து கொடுத்தார். ஆனால் அந்த ராஜினாமா கடிதம் தட்டச்சு செய்யப்பட்டு இருந்ததால் , முதலில் சபாநாயகர் அதனை வாங்க மறுத்துவிட்டார்.
ராஜினாமா கடிதத்தை கைப்பட எழுதி சமர்பிக்குமாறு இசக்கி சுப்பையாவிற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து இசக்கி சுப்பையா, தனது ராஜினாமா கடிதத்தை கைப்பட எழுதி சபாநாயகரிடம் வழங்கி இருக்கிறார். ராஜினாமா கடிதத்தை கைப்பட எழுதி அளிக்க வேண்டிய நிலையில், டைப் செய்து கொண்டு வந்ததால் முதலில் சபாநாயகர் அதனை ஏற்க மறுத்த சம்பவம் தலைமைச்செயலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக நேற்று மதுராந்தகம் தொகுதி மரகதம் குமாரவேல், பெருந்துறை தொகுதி ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதி சத்யபாமா ஆகிய 3 அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
