சென்னை: ஆட்சி அமைத்து முழுவதுமாக 1 மாதம் கூட ஆகாத நிலையில் அனைத்து தரப்பினரின் கடும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது விஜய் தலைமையிலான தவெக அரசு. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக அரசை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அந்த அறிக்கையில், தவெக ஆட்சி அமைத்த 15 நாட்களிலேயே கொடூரக் குற்றச் சம்பவங்கள், சிறுவர் சிறுமியரின் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், ஆளுங்கட்சியினரின் மாமூல் வேட்டைகள், பெட்ரோல் குண்டு வீச்சுகள், இப்பொழுது அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுகள் என தமிழக மக்கள் தினம் தினம் அல்லல்படுகின்றனர். ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல், ரீல்ஸ் மோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் விஜய் என்று கடுமையாக சாடி இருக்கிறார்.
ஆட்சிக்கு வந்தவுடன் சட்டம் ஒழுங்கு, சுகாதாரம், பாதுகாப்பு, மக்களின் அத்தியாவசியத் தேவைகள் என அனைத்திலும் கோட்டை விட்டு விட்டு, கமுக்கமாக கோட்டைக்குள் ஒளிந்து கொள்வது தான் விஜய் அவர்கள் முன்மொழிந்த “மாற்று” அரசியலா? என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தங்களின் அடிப்படைத் தேவையான மின்சாரம் தடையின்றி கிடைக்க வேண்டுமென போராடும் மக்களை அலட்சியப்படுத்துவது தான் தவெக-வின் அனைவருக்குமான ஆட்சியா.! தீயசக்தியை அழிக்க வந்த தூயசக்தி என்று கூறிக்கொண்டு ஆட்சியை பிடித்துள்ள தவெக அரசு கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தான் நிதர்சனம் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டு உள்ளார்.
