×

உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் கொலை குற்றவாளிகள் கையெழுத்து போட்டுவிட்டு திரும்பியபோது சரமாரி அரிவாள் வெட்டு

 

உளுந்தூர்பேட்டை, மே 26: கொலை வழக்கு தொடர்பாக உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் குற்றவாளிகள் கையெழுத்து போட்டுவிட்டு திரும்ப காரில் சென்றபோது மற்றொரு கும்பல் வழிமறித்து வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரை கடந்த 2021ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த மனோஜ் என்பவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான முன்விரோதம் காரணமாக லட்சுமணனை வெட்டி படுகொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 2025ம் ஆண்டு தனது தந்தையை வெட்டி படுகொலை செய்த மனோஜை முன்விரோதம் காரணமாக லட்சுமணன் மகன்கள் குருபாண்டியன் (25) மற்றும் இவரது தம்பி பாலமுருகன் (23) ஆகியோர் பழிக்குப்பழி தீர்க்கும் வகையில் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக சிவகங்கை மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் இக்கொலை வழக்கில் தொடர்புடைய குருபாண்டியன் மற்றும் அவரது தம்பி பாலமுருகன் ஆகிய இருவரும் மதுரை நீதிமன்ற உத்தரவின்படி உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் தினந்தோறும் வந்து கையெழுத்திட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை குருபாண்டியன் மற்றும் அவரது தம்பி பாலமுருகன் ஆகியோர் நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டுவிட்டு மீண்டும் திரும்ப ஊருக்கு செல்வதற்காக காரில் சென்றுள்ளனர். இந்த காரை வெள்ளைச்சாமி மகன் சண்முகநாதன் (23) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்த காரில் கண்ணன் மகன் சண்முகபிரபு (26) என்பவரும் சென்றுள்ளார்.

இந்த கார் திருச்சி தேசிய நெடுஞ்சாலை சேலம் ரோடு ரவுண்டானா அருகில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவ்வழியாக முன்னாள் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் வேகத்தடை அருகில் குருபாண்டியன் சென்ற காரை லிப்ட் கேட்பது போல் மறித்துள்ளார். அப்பகுதியில் வேகத்தடை இருந்ததால் காரை மெதுவாக ஓட்டிச் சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்து காரை மறித்தவர் மீது சந்தேகம் ஏற்பட்டு காரை டிரைவர் வேகமாக இயக்க முயன்றபோது அதே நேரத்தில் பின்னால் மற்றொரு காரில் மின்னல் வேகத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் குருபாண்டியன் மற்றும் காரில் சென்றவர்களை படுகொலை செய்யும் நோக்கில் வீச்சரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு சரமாரியாக காரை தாக்கியுள்ளனர்.

இதில் கார் கண்ணாடி முழுவதும் நொறுங்கி சேதம் அடைந்ததுடன் காரில் இருந்த குருபாண்டியன் உள்ளிட்ட 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அப்பகுதியை சேர்ந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் இருசக்கர வாகனத்தை அதே இடத்தில் விட்டு விட்டு கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் வந்த காரில் தப்பிச் சென்றுள்ளார். சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் நடைபெற்ற இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்பிய குருபாண்டியன் உள்ளிட்ட 4 பேரும் காரை உடனடியாக திருப்பிக்கொண்டு அதே சாலையில் இருந்த உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காரை நிறுத்திவிட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி அசோகன், இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் 6க்கும் மேற்பட்ட நபர்கள் வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொலை வெறி தாக்குதல் நடத்திய இச்சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனோஜ் படுகொலை செய்யப்பட்டதன் முன்விரோதம் காரணமாக அவரது உறவினர்கள் குணா, கனி, விமல்ராஜ் உள்ளிட்டவர்கள் தான் இந்த கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக போலீசாரிடம் குருபாண்டியன் கொடுத்த தகவலின் பேரில் அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் சிவகங்கை மாவட்டத்துக்கு விரைந்துள்ளனர்.

படுகொலைக்கு பழிவாங்கும் வகையில் மீண்டும் பட்டப்பகலில் நடைபெற்ற இக்கொலை வெறி தாக்குதல் சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர் சாலையோரம் நிறுத்திவிட்டு சென்ற பைக்கை கைப்பற்றி உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Ulundurpet ,Ulundurpet court ,Karaikudi ,Sivaganga ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே பைக் மீது கார் மோதி விபத்து: 6 பேர் படுகாயம்