கடலூர், மே 22: கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்பேரில், டிஎஸ்பி தமிழ் இனியன் தலைமையில் போதை பொருள் ஒழிப்பு பிரிவு எஸ்ஐ தவச்செல்வன் மற்றும் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர் சுனாமி நகரை சேர்ந்த ராமமூர்த்தி மகன் வினோத்(33) என்பதும், இவருடன் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் அருள்தாஸ்(62), அருள்தாஸ் மனைவி ராஜலட்சுமி(55), ராமு மகன் கார்த்திக்ராஜா(29) என 4 பேரும் 10 மூட்டை புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வினோத் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 110 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3,56,220. புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த குற்றவாளிகளை பிடித்த போலீசாரை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.
