போளூர் அருகே பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூல்; இஷ்டம் இருந்தா கொடுங்க… இல்லைன்னா மது வாங்காமல் போங்க: டாஸ்மாக் ஊழியரின் பேச்சு வைரல்

 

சேத்துப்பட்டு, ஜூலை 20: போளூர் அருகே பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூலிப்பதை தட்டிக்கேட்ட ஒருவரிடம் இஷ்டம் இருந்தா கொடுங்க, இல்லையென்றால் மது பாட்டிலை வாங்காமல் கிளம்புங்கள் என உதாசீனப்படுத்தி டாஸ்மாக் ஊழியர் பேசும் வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே எட்டிவாடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில் அரசு நிர்ணயித்த விலையை விட ஒவ்வொரு மதுபான பாட்டிலுக்கும் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் அந்த கடைக்கு சென்று, ‘எதற்காக கூடுதலாக ரூ.10 வசூலிக்கிறீர்கள்?’ என விற்பனையாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு அங்கு பணியில் இருந்த டாஸ்மாக் விற்பனையாளர், ‘கூலிங் சார்ஜாக வாங்குகிறோம். விருப்பம் இருந்தால் கொடுங்கள், இல்லையென்றால் மது வாங்காமல் கிளம்பி போய்க்கிட்டே இருங்கள்’ என உதாசீனப்படுத்தி பதிலளித்ததாக கூறப்படுகிறது. இந்த உரையாடல் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டதா, அதற்கு அதிகாரப்பூர்வ அனுமதி உள்ளதா? என டாஸ்மாக் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், விதிமீறல் உறுதியானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: