திருவள்ளூர், மே 20: திருவள்ளூர் மாவட்டத்தில் ஓய்வூதியர்களின் குறை தீர்க்கும் கூட்டம் வரும் ஜூன் 19ம் தேதி நடைெபறவுள்ளது என்று கலெக்டர் மு.பிரதாப் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் தீர்வு செய்யப்படாமல் நிலுவையில் உள்ள ஓய்வூதியம் மற்றும் ஓய்வு காலப்பயன்கள் குறித்த ஓய்வூதியதாரர்களின் முறையீட்டு மனுக்கள், திருவள்ளூர் மாவட்ட கலெக்டரால் வரும் ஜூன் 19ம் தேதி வரை வரவேற்கப்படுகிறது. மேலும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் பெயர், முகவரி, இறுதியாக பணிபுரிந்த அலுவலகம், தலைமை அலுவலகத்தின் முகவரி, ஓய்வு பெற்ற நாள், ஓய்வூதிய புத்தக எண் மற்றும் கோரிக்கை எந்த அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது போன்ற விவரங்களை தங்கள் மனுவில் குறிப்பிடப்பட வேண்டும்.
இம்முறையீடுகள் குறித்து ஓய்வூதியதார்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் வரும் ஜூன் 19ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பரிசீலனை செய்து தீர்வு செய்யப்படுவதற்கு தடையாக உள்ள இடர்பாடுகளுக்கு முடிவு காணவும், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கவும் கூட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, ஓய்வூதியதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு, மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் கேட்டுக் கொண்டுள்ளார்.
