×

திருத்தணி-திருவள்ளூர் இடையே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் மந்தம்: அதிகரித்து வரும் விபத்துகளால் வாகன ஓட்டிகள் அச்சம்

 

திருத்தணி,மே 22: திருவள்ளூர்- திருத்தணி இடையே தேசிய நெடுஞ்சாலையில், சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, சாலை ஆங்காங்கே துண்டிக்கப்பட்டு சர்வீஸ் சாலையை ஒழுங்குப்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால், அடிக்கடி வாகன விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, தமிழ்நாடு-ஆந்திர மாநிலங்களுக்கு இடையில் போக்குவரத்து மற்றும் வர்த்தக சேவையில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. சென்னை-திருப்பதி இடையில் 133 கிமீ நீளம் கொண்ட சாலையில் 24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், கார்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. 2 வழி சாலையாக உள்ள இச்சாலையை போக்குவரத்து வசதி மற்றும் சாலைகள் கட்டமைப்பு மேம்படுத்தும் வகையில் 6 வழி சாலையாக மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்தது.

இதற்காக, கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களில் சாலை விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ஒரு பகுதியாக, திருவள்ளூர் முதல் திருத்தணி அருகே, ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பொன்பாடி வரை 44 கிமீ தூரம் கொண்ட 2 வழி தேசிய நெடுஞ்சாலை 4 வழி சாலையாக மேம்படுத்த ரூ.1.376 கோடி கடந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2024ல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2026ம் ஆண்டு இறுதிக்குள் இப்பணிகள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக தனியார் நிறுவனம் சார்பில், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கனரக வாகனங்கள், இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஆறுகள், கிராமங்கள் இருப்பதால் உயர்மட்ட பாலங்கள், சிறு பாலங்கள், சுரங்கப்பாதைகள் இணைப்பு சாலைகள் ஏராளமாக அமைக்க வேண்டி உள்ளது.

குறிப்பாக, சாலைகள் மேடு பள்ளங்கள் சமன் செய்ய ஏரி மண் அதிக அளவில் தேவைப்படுவதால், சாலைப் பணிகளுக்கு காலதாமதம் அதிகரித்து வருகிறது. இதனால், பணிகள் தொடங்கி 2 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், 35 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. 100 சதவீத பணிகள் முடித்து போக்குவரத்து சேவைக்கு குறைந்தது 3 முதல் 4 ஆண்டுகள் பிடிக்கும் என்று நிலை உள்ளது. எனவே, மந்திகதியில் நடக்கும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர். தொடரும் வாகன விபத்து தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணி முதல் திருவள்ளூர் வரை இரண்டு வழி சாலை துண்டிக்கப்பட்டு ஆங்காங்கே ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. சாலை பணிகள் நடைபெற்று வருவதால் சாலை சேதமடைந்து பல்வேறு பகுதிகளில் குண்டும் குழியுமாக மாறியுள்ளது.

சர்வீஸ் சாலை ஒழுங்குப்படுத்தாமல் பாதியில் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைக்கு எச்சரிக்கை பலகைகள் வைக்காமல் பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து, போக்குவரத்திற்கு வாகனங்கள் திசை திருப்பி விடப்படுவதால், திருத்தணி முதல் திருவள்ளூர் வரை 35 கிமீ தூரம் பயணம் செய்ய கூடுதலாக அரை மணி நேரம் தேவைப்படுவதோடு, சாலை பணிகள் நடைபெற்று வருவதால், அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் விபத்துகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், இச்சாலையில் பயணம் செய்ய வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். வாகன விபத்து தடுத்து நிறுத்த சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளில் பாதுகாப்பு உறுதிப்படுத்தவும், வாகனங்கள் திருப்பி விடும் பகுதிகளில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கவும், இரவு நேரங்களில் ஒளிரும் விளக்கு அமைக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

சர்வீஸ் சாலை அமைத்துள்ளோம்: திட்ட இயக்குநர்
திருவள்ளூர்- முதல் திருத்தணி அருகே, ஆந்திர எல்லைப் பகுதி பொன்பாடி வரை 43 கிமீ தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் கடந்த 2024ல் தொடங்கி 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது. 2026 டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை 35 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. சாலை விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தி ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் கால தாமதம் ஏற்பட்டது. சிறு பாலங்கள், உயர்மட்ட பாலங்கள், சப்வே அமைக்கும் பணிகளால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து வசதிக்காக சர்வீஸ் ரோடு அமைத்துள்ளோம், மேடு பள்ளங்கள் நிறைந்த பகுதிகள் சமன் செய்து சாலை அமைப்பது பெரும் சவாலாக உள்ளது. இதனால், பணிகள் விரைந்து திட்டமிட்ட காலத்தில் முடிப்பதில் தாமதம் ஏற்படும் நிலை உள்ளது. சாலை விரிவாக்கப் பணிகளால் ஆங்காங்கே சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் ஏற்படும் விபத்துகள் தடுத்து வாகன ஓட்டிகள் பாதுகாப்பு உறுதிப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். வாகன ஓட்டிகள் சாலை பணிகள் நடைபெற்று வருவதால் மிதமான வேகத்தில் சர்வீஸ் சாலையில் பயணிக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய திட்ட இயக்குநர் ரவீந்திர ராவ் கேட்டுக் கொண்டார்.

கிராமங்களுக்கு இணைப்பு சாலைகள்
தேசிய நெடுஞ்சாலையுடன் கிராமங்களை இணைக்கும் இணைப்பு வழி ஒரு சில இடங்களில் மட்டுமே ஏற்படுத்தி வருவதால், கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தூரம் பயணித்து தங்களின் கிராமங்களுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கும் வகையில் கிராமங்களுக்கு இணைப்பு வழி ஏற்படுத்த வேண்டும் என்று நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள கிராம மக்கள் கோரிக்கையாக உள்ளது.

 

Tags : National Highway ,Tiruvallur ,Thiruvallur ,Highway ,
× RELATED அத்தங்கி காவனூரில் செடி-கொடிகள்...