×

கடலூர் அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம்; இபிஎஸ்-எம்.சி.சம்பத் தரப்பினருக்கு சம்மன்: 21ம் தேதி ஆஜராக கோட்டாட்சியர் உத்தரவு

 

கடலூர், மே 19:கடலூர் அதிமுக கட்சி அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இபிஎஸ்-எம்.சி.சம்பத் தரப்பினருக்கு கோட்டாட்சியர் சுந்தர்ராஜன் சம்மன் அனுப்பியுள்ளார். உரிய ஆவணங்களுடன் வரும் 21ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார். கடலூர் பாதிரிக்குப்பத்தில் அதிமுக அலுவலகம் உள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும்பாலான இடங்களில் தோல்வி அடைந்த நிலையில், தற்போது அதிமுக இபிஎஸ் அணி, சி.வி.சண்முகம் அணி என இரண்டாக உடைந்துள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தை நீக்கி அவரது சகோதரர் எம்.சி. தாமோதரனை கடலூர் வடக்கு மாவட்ட செயலாளராகவும், மாநகர செயலாளராக சி.கே.எஸ் கார்த்திகேயனையும் நியமித்துள்ளார்.

இந்நிலையில் பாதிரிக்குப்பத்தில் உள்ள அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தரப்பினருக்கும், எடப்பாடி பழனிச்சாமி அணியை சேர்ந்த புதிய மாவட்ட செயலாளர் எம்.சி.தாமோதரன் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பிரச்னைக்கு சுமூக தீர்வு காணும் வகையில் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க வேண்டும் என கடலூர் கோட்டாட்சியருக்கு காவல்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து கோட்டாட்சியர் சுந்தர்ராஜன், கடலூர் அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம் என்ற உரிமை கோருவது சம்பந்தமாக எம்.சி.சம்பத் மற்றும் அவரது தரப்பை சேர்ந்தவர்களுக்கும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பை சேர்ந்த எம்.சி.தாமோதரன் மற்றும் அவரது தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி உள்ளார். அதில் அதிமுக அலுவலகத்தை உரிமை கூறுவது தொடர்பாக இரு தரப்பினரும் உரிய ஆவணங்களுடன் வரும் 21ம் தேதி மாலை 5.45 மணிக்கு கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படியும், அந்த ஆவணங்களின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

Tags : Cuddalore AIADMK ,EPS- ,MC ,Sampath ,District Magistrate ,Cuddalore ,District ,Magistrate ,Sundarrajan ,EPS-MC ,AIADMK ,Pathirikuppam, Cuddalore.… ,
× RELATED 110 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது