×

திருவந்திபுரம் சாலக்கரை மாரியம்மன் கோயிலில் உண்டியல் திருட்டு

கடலூர், மே 18: கடலூர் அருகே திருவந்திபுரம் மெயின்ரோடு பகுதியில் சாலக்கரை முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு நடுப்பகுதியில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் கோயிலில் பூஜை முடிந்து இரவு பூசாரி கோயிலை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் நேற்று காலை வழக்கம்போல கோயிலை திறக்க சென்று சுற்றுச்சுவர் கேட்டின் பூட்டை திறந்து கோயிலுக்குள் சென்றார். அப்போது கோயிலுக்குள் வைத்திருந்த உண்டியலை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருட்டு நடந்த அம்மன் கோயிலை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.

அதில், கடந்தாண்டு கணக்கின்படி உண்டியலில் ரூ.40 ஆயிரம் காணிக்கை இருந்ததாகவும், இந்தாண்டு இதுவரை உண்டியலில் உள்ள பணம் மற்றும் நகை எண்ணப்பட வில்லை எனவும், மேலும் மர்ம நபர்கள் கோயில் சுற்றுச்சுவரை தாண்டி வந்து உண்டியலை தூக்கி சென்றிருக்கலாம் என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : Thiruvananthapuram Salakkarai Mariamman Temple ,Cuddalore ,Salakkarai Muthumariamman Temple ,Thiruvananthapuram Main Road ,
× RELATED 110 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது