குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் அம்மனுக்கு செலுத்திய காணிக்கை சேலைகள் ரூ.57 ஆயிரத்திற்கு ஏலம்

 

குடியாத்தம், மே 20: குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் அம்மனுக்கு காணிக்கை செலுத்திய சேலைகள் ரூ.57 ஆயிரத்திற்கு ஏலம் போனது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா கடந்த 15ம் தேதி நடைபெற்று முடிந்தது. பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் சூறை தேங்காய், கூழ்வார்த்தல், பொங்கலிடுதல், அங்கபிரதட்சணம், காணிக்கை செலுத்துதல் உள்ளிட்ட வேண்டுதல்களை நிறைவேற்றினர். மேலும், சிலர் அம்மனுக்கு சேலையை காணிக்கையாக செலுத்தினர்.

தொடர்ந்து, ஆண்டுதோறும் காணிக்கையாக செலுத்தப்பட்ட சேலைகள் சிரசு மண்டபத்தில் ஏலம் விடுவது வழக்கம். அதன்படி பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய சேலைகள் நேற்று ஏலம் விடப்பட்டது. இதற்கு கோயில் செயல் அதிகாரி சிவக்குமார் தலைமை தாங்கினார். ஆய்வாளர் பாரி முன்னிலை வகித்தார். இதில், திரளான பெண்கள் கலந்துகொண்டு போட்டிபோட்டு சேலைகளை ஏலம் எடுத்தனர். இதில் மொத்தம் 217 சேலைகள் ரூ.57 ஆயிரத்து 860க்கு ஏலம் போனது என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு மொத்தம் 110 புடவைகள் ரூ.40 ஆயிரத்து 40க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: