பள்ளிகொண்டா, மே 20: பள்ளிகொண்டா அருகே கிணறு அருகே அமர்ந்து மது அருந்திய 3 வாலிபர்கள் கிணற்றில் குதித்து உயிருக்கு போராடிய நிலையில் தீயணைப்பு துறையினர் அவர்களை உயிருடன் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் லட்சுமி கார்டன் பின்புறம் ஜெகதீசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தின் கிணறு அருகே நேற்று மாலை 3 வாலிபர்கள் மது அருந்தியுள்ளனர். சிறிது நேரத்தில் மது போதையில் அவர்கள் 3 பேரும் கிணற்றில் குளிக்கலாம் என நினைத்து குதித்துள்ளனர். மதுபோதையில் நீச்சல் அடிக்கமால் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது நிலத்தின் உரிமையாளர் ஜெகதீசன் அந்த வழியாக வந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்து பள்ளிகொண்டா தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ராட்சத கயிறுகளை பயன்படுத்தி 3 வாலிபர்களை உயிருடன் பத்திரமாக மீட்டனர். மேலும், நடத்திய விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த திவாகர்(32), சிவா(34), சுனில்(40) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, 3 வாலிபர்கள் அதே இடத்திலிருந்து மருத்துவமனை செல்லாமல் வீடு திரும்பியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
