ஊராட்சிகளில் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வராதபடி அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும்: ஊராட்சி செயலாளர்களுக்கு அலுவலர்கள் உத்தரவு

 

 

அணைக்கட்டு, மே 19: பொதுமக்களிடமிருந்து புகார்கள் வராதபடி அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும் என ஊராட்சி செயலாளர்களுக்கு அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். அணைக்கட்டு ஒன்றியத்தில் 51 ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சிகளில் ஊராட்சி நிர்வாகம் மூலம் ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. அணைக்கட்டு பிடிஓ அலுவலகத்தில் நேற்று ஊராட்சி செயலாளர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. உதவி திட்ட அலுவலர் (ஊரக வேலைவாய்ப்பு திட்டம்) பவானி, உதவி செயற்பொறியாளர் டார்வின் ஆகியோர் தலைமை தாங்கினார். பிடிஓக்கள் வினோத்குமார், செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல துணை பிடிஓக்கள் வரவேற்றனர்.

கூட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தாமதமின்றி செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக பொதுமக்களின் அடிப்படை தேவைகளில் மிகவும் முக்கியமானதாக குடிநீர் வசதி உள்ளது. கோடை காலம் என்பதால் பற்றாக்குறை ஏற்படலாம். அந்த நிலை இல்லாத வண்ணம் சீரான குடிநீர் வழங்க வேண்டும். ஏதாவது சில இடங்களில் மோட்டார் பழுது, பழுப்புலைன்கள் சேதம் ஏற்பட்டால் உடனடியாக விரைந்து சீரமைத்து குடிநீர் தடையில்லாமல் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். அதேபோல் திருவிழாக்கள் நடைபெறும் கிராமங்களில் கூடுதலாக குடிநீர் வழங்குவதற்கும், ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். வீட்டு வரி, குழாய் வரி உள்ளிட்டவரி வசூல் பணிகளை விரைவாக செய்து முடிக்க வேண்டும்.

ஊராட்சிகளில் குப்பை கொட்டுவதற்கு பயன்படுத்த இடத்தில் மட்டுமே குப்பைகள் இருக்க வேண்டும். தேவையில்லாமல் கிராமங்களில் குப்பை தேங்க வைத்திருப்பதாக புகார்கள் வந்து உறுதி செய்யப்பட்டால் அல்லது குப்பைகள் அகற்றப்படாமல் நீண்ட நாட்களாக இருந்தால், அந்த ஊராட்சி செயலாளருக்கு அபராதம் விதிக்கப்படும். அதேபோல் இரவில் எரியாமல் உள்ள தெரு விளக்குகளை கண்டறிந்து அவை எடுத்துவிட்டு புதியதாக விளக்குகள் பொருத்தி தெரு விளக்குகள் தினந்தோறும் எரிவதை ஊராட்சி செயலாளர்கள் கண்காணித்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பொதுமக்களிடமிருந்து புகார்கள் வராதபடி ஊராட்சி செயலாளர்கள், தேவையான அடிப்படை வசதிகளை கண்காணித்து செய்து கொடுக்க வேண்டும். ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்களின் அனுமதி, ஒத்துழைப்புடன் நடைபெறும் அடிப்படை வசதிகள் தடையில்லாமல் நடைபெற வேண்டும். கூடுதல் தேவை இருப்பின் பிடிஓக்களிடம் தெரிவித்தால், தேவையான புதியதாக போர்வெல், சின்டெக்ஸ் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும் என ஊராட்சி செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

Related Stories: