எடப்பாடி தலைமைக்கு முழு ஆதரவு; 25 பேரின் எம்எல்ஏ பதவியை பறிக்க சட்ட நடவடிக்கை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிரடி முடிவு

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த 25 பேரின் எம்எல்ஏ பதவியை பறிக்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்து அதிரடி முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி, முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். இந்த தேர்தலில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டது. இதில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால், அதிமுகவில் தற்போது கோஷ்டி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், அதிமுகவை பல்வேறு எதிர்ப்புகளை மீறி கைப்பற்றி, அதிமுக பொதுச்செயலாளராக நீடித்து வரும் எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதில் இருந்து சட்டமன்றம், பாராளுமன்றம், இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என 11 தேர்தல்களில் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

இது அதிமுக கட்சிக்கு ஒவ்வொரு தேர்தல்களிலும் கிடைக்கும் மிகவும் பின்னடைவாக அதிமுக நிர்வாகிகள் பார்க்கிறார்கள். இதனால் அதிமுக முக்கிய புள்ளிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் பொதுச்செயலாளரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எழுப்பப்பட்டது. இதனால் தற்போது அதிமுகவில் உள்கட்சி பிரச்சனை தீவிரமாகியுள்ளது. ஒரு பக்கம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், மற்றொரு பக்கம் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலும் கட்சி இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த தவெக அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில், வேலுமணி அணியைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்தனர். அதே சமயம், எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள 22 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இந்த நிலையில், அதிமுக கொறடா உத்தரவை மீறி தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த 25 பேரின் எம்எல்ஏ பதவிகளை பறிக்க எடப்பாடி தரப்பினர் முயற்சி செய்து வருகிறார்கள். அதேநேரம், 25 எம்எல்ஏக்களின் மாவட்ட செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே பறித்து அதிரடி நடவடிக்கை எடுத்தார். தற்போது அந்த மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை எடப்பாடி நியமித்துள்ளார்.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தவெகவுக்கு எதிராக திமுக கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சித்தார். ஆனால் நாங்கள் ஏற்கவில்லை. சட்டமன்ற தேர்தலில் தோல்விக்கான காரணத்தை கண்டறிய அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென்று எடப்பாடி பழனிசாமியை எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பினர் வலியுறுத்தினர். பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்காக, கட்சியின் 5-ல் 2 பங்கு உறுப்பினர்களின் கையெழுத்துகளை பெற்றுள்ளதாக வேலுமணி அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மறுப்பு தெரிவித்தனர். இதுபோன்று இரு அணிகளும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தேர்தல் தோல்விக்கு பிறகும், சட்டமன்றத்தில் 25 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி இன்று கூட்டியுள்ளார். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செயல்பட்ட 22 எம்எல்ஏக்கள் மற்றும் 25 மாவட்டங்களில் ஏற்கனவே இருந்த மாவட்ட செயலாளர்களுக்கு பதில் நியமிக்கப்பட்ட புதிய மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுவதையொட்டி, அதிமுக தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் எந்த நேரத்திலும் என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற பரப்பரப்பான நிலையில் இருப்பதால், அங்கு பலத்த போலிஸ் பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு தேர்தல் தோல்வியின் போதும் அதிமுகவில் இதுபோன்ற பிரச்னைகள் வருவது இயல்புதான். அதனால், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கட்சியின் தலைமைக்கு விசுவாசமாக இருந்து, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை காப்பாற்ற வேண்டும். தற்போது, தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ள 25 எம்எல்ஏக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களின் எம்எல்ஏ பதவியை பறிக்க கட்சி தலைமை அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று எடப்பாடி உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

மேலும் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேலுமணி ஆதரவாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கி வருகின்றனர். அதேநேரத்தில் பொதுக்குழுவை கூட்ட வேண்டாம் என்று தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் கையெழுத்திடுகின்றனர். அதில் இரு தரப்பிலும் கையெழுத்திட்ட பலர் உள்ளனர். அப்படி இரு தரப்பிலும் கையெழுத்து போட்டவர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் நோட்டரி பப்ளிக் முன்னிலையில் மீண்டும் கையெழுத்து பெற்று வருகின்றனர். உதாரணமாக தென்காசி மாவட்டத்தில் அதிமுகவில் 62 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 17 பேர் மட்டுமே வேலுமணிக்கு ஆதரவாக கையெழுத்திட்டனர். அதில் 6 பேர் எடப்பாடி அணிக்கு ஆதரவாகவும் கையெழுத்திட்டுள்ளனர்.

இதனால் அவர்கள் ஆறு பேரிடமும் நோட்டரி முன்பு ஆஜராகி மீண்டும் கையெழுத்திட்டுள்ளனர். இதனால் எடப்பாடி அணிக்கு 51 பேரும், வேலுமணி அணிக்கு 11 பேரும் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர். இப்படி இரு தரப்பினரும் போட்டி போட்டு கையெழுத்து பெற்றுவருவது குறித்தும், வேலுமணிக்கு ஆதரவாக கையெழுத்திட்டவர்களை கண்டறிந்து கட்சி விரோத நடவடிக்கை எடுப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: