கோதன்பர்க்: ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார்’ விருதினை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக்கொண்டார். ஸ்வீடன் நாட்டிற்கு நேற்று சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டின் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் கோதன்பர்க் விமான நிலையத்தில் வரவேற்றார்.
இந்தப் பயணத்தின் போது, இந்திய மற்றும் ஸ்வீடன் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தியதற்காகவும், அவரது தொலைநோக்கு தலைமைப் பண்பைப் பாராட்டும் விதமாகவும் ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார்’ பிரதமருக்கு வழங்கப்பட்டது. ஸ்வீடன் இளவரசி விக்டோரியா இந்த விருதினை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார். இது பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் 31வது சர்வதேச உயரிய விருதாகும்.
கடந்த 1748ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட இந்த விருது, ஸ்வீடன் நாட்டின் நலனுக்காகப் பாடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய கௌரவமாகும். இந்த நிகழ்ச்சியின் போது, 1913ம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் நினைவாக சிறப்புப் பரிசுகளை இரு நாட்டுப் பிரதமர்களும் பரிமாறிக்கொண்டனர்.
இது தாகூர் ஸ்வீடன் நாட்டிற்கு 1926ம் ஆண்டில் மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தின் 100வது ஆண்டை முன்னிட்டு அமைந்தது. இந்த கவுரவம் குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘இந்த விருதினை இந்தியா மற்றும் ஸ்வீடன் இடையிலான வரலாற்று உறவுகளுக்கும், இரு நாட்டு மக்களிடையே நிலவும் அன்பிற்கும் அர்ப்பணிக்கிறேன்’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
