கரூர், மே 19: மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜ் தலைமை வகித்தார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைபட்டா, வங்கி கடன்கள், பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பாடு தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 402 மனுக்கள் பெறப்பட்டன. மேலும் மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியரக தரைதளத்தில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாமில், வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 41 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.
