வருசநாடு, மே 19: வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு பகுதியில் நேற்று சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் திடீரென கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அவ்வப்போது மழை பெய்து வருவதால், கோடை விவசாயம் செய்வதற்கும் மானாவாரி நிலங்களில் பயிரிடுவதற்கும் உகந்ததாக அமைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பல பகுதிகளில் கோடை உழவுப் பணிகளை தொடங்கியுள்ளனர். மேலும் இந்த மழையால் மூல வைகையில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதி மக்களுக்கு குடிநீர் பஞ்சமும் இருக்காது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்
