திருப்பூர், மே. 19: திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷிடம் பதுருல் இஸ்லாம் மதரஸா பள்ளிவாசல் நிர்வாகிகள் கொடுத்த மனு: உடுமலை பெரியகோட்டை பஞ்சாயத்து, சிவசக்தி காலனியில் 1981-ல் தொடங்கி தற்போது 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள பதுருல் இஸ்லாம் மதரஸா பள்ளிவாசலுக்கு இன்று வரை இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு இடவசதி இல்லை. இதனால், இறந்தவர்களை அடக்கம் செய்ய 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கண்ணமநாயக்கனூர் பஞ்சாயத்து மருள்பட்டி கிராமத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அடக்கஸ்தலத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
எங்கள் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதிக்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சின்னவீரம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட புல எண்.199-ல் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தினை இஸ்லாமியர்களின் (அடக்கஸ்தலம்) கபரஸ்தான் அமைக்க வழங்கி உதவுமாறு பணிவுடன் எங்கள் பகுதி இஸ்லாமியர்கள் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
