திருப்பூர், மே 18: திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் எம்பி சத்தியபாமா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மனிஷை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, அவருடன் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். அதில் கட்சி தொண்டர் ஒருவர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் மொபைல் போனில் ரீல்ஸ் எடுத்துள்ளார். மேலும், அந்த வீடியோக்களில் மாவட்ட கலெக்டர் மற்றும் அங்கு பணியில் இருந்த அரசு அலுவலர்களையும் காண்பித்து, அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
அரசு அலுவலக வளாகங்களுக்குள் தகுந்த அனுமதியின்றி வீடியோக்கள் எடுக்கவும் அரசு பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ரீல்ஸ் பதிவிடவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் முதன்மை நிர்வாக அலுவலகத்திலேயே தவெகவினர் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
