புதுடெல்லி: மருத்துவக் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்காக தேசிய அளவில் நடத்தப்படுவது நீட் நுழைவுத் தேர்வு ஆகும். இதில் 2026 நடப்பு கல்வி ஆண்டுக்கான இளநிலை நீட் நுழைவுத் தேர்வு கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் சுமார் 22 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதி இருந்தனர். இருப்பினும் வினாத்தாள் கசிவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தேர்வு ரத்து செய்யப்பட்டது.
குறிப்பாக ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்துள்ளது என்பது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தேர்வு நடைபெறுவதற்கு 42 மணி நேரங்களுக்கு முன்பாகவே கையால் எழுதப்பட்ட வினாத்தாள் டெலிகிராம், வாட்ஸாப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது. இதுபோன்ற சூழலில் இதுதொடர்பான வழக்கை தற்போது சிபிஐ கையிலெடுத்துள்ளது. இதையடுத்து மறு தேர்வு அடுத்த மாதம் 21ம் தேதி நடத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் யு.டி.எப் எனற அமைப்பின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும். அரசியலமைப்பின் 32-வது பிரிவின் கீழ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளோம். நீட் தேர்வை நடத்தியதில் கட்டமைப்பு ரீதியான மற்றும் பேரழிவு தரும் தோல்வி அரங்கேறி உள்ளது. மேலும் தேர்வு முறையில் கட்டமைப்பு சார்ந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக நாடாளுமன்ற சட்டம் வாயிலாக ஒரு சட்டரீதியான தேசிய தேர்வு அமைப்பை உருவாக்க வேண்டும்.
அந்த அமைப்பானது சட்ட அதிகாரங்கள், வெளிப்படைத்தன்மை விதிகள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு நேரடிப் பொறுப்புக்கூறும் கடமை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். எதிர்கால தேர்வுகள் எந்தவித பிரச்னையும் இல்லாமல் குறிப்பாக வினாத்தாள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் செயல்படும் ஒரு குழுவை அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மனுவானது வரும் வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
