புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 4 பிராந்தியங்கள் அடங்கி உள்ளன. இதில் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகிலுள்ள ஏனாமும் ஒன்று. புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஏனாம் தொகுதியில் ஆளும் கட்சியான என்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்லாடி கிருஷ்ணாராவ், அவரை எதிர்த்து போட்டியிட்ட சிட்டிங் எம்எல்ஏவான கொல்லப்பள்ளி அசோக் னிவாசை தோற்கடித்து வெற்றிபெற்றார். காங்கிரசில் ஏற்கனவே 3 முறை அமைச்சர் பதவி வகித்த இவர் கடந்த 13ம்தேதி முதல்வர் ரங்கசாமி பதவியேற்பு விழாவின்போது புதிய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் அமைச்சராக பதவியேற்றபின்பு முதன்முதலாக தனது தொகுதியான ஏனாமிற்கு மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று சென்றார். அவர் ராஜமுந்திரியில் இருந்து ஹெலிகாப்டரில் ஏனாம் சென்றார். அங்கு அவரை அரசு அதிகாரிகள் வரவேற்றனர். ஏனாம் பெரியரோட்டில் தற்காலிக ஹெலிகாப்டர் தளத்தில் வந்திறங்கியதும் அங்கு கூடியிருந்த தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்த அவர் திறந்த வேனில் ஆதரவாளர்களால் அழைத்துச் செல்லப்பட, வழிநெடுகிலும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. கிரேனில் தூக்கி வந்து மாலை அணிவித்தனர். ெதாடர்ந்து அருகிலுள்ள கோதாவரி ஆற்றில் கட்சிக் கொடிகளை பறக்கவிட்டு வரவேற்பு கொடுத்தனர்.
ஏற்கனவே காங்கிரசில் 3 முறை அமைச்சர் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு, என்ஆர் காங்கிரசுக்கு 2021ல் மல்லாடி கிருஷ்ணாராவ் தாவியது தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. அத்தோடு ஒரே ஒரு தொகுதியில் வெற்றிபெறும் மல்லாடி கிருஷ்ணாராவுக்கு அமைச்சர் பதவி ஒதுக்கக் கூடாது என அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தற்போது அவருக்கு 4வது முறையாக அமைச்சர் பதவி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
