கன்னியாகுமரி: இந்தியாவின் தென்கோடி முனையில் உள்ள சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஏப்ரல், மே கோடை விடுமுறை சீசன் காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வருவது வழக்கம். மேலும் பள்ளிகளில் விடுமுறையை முன்னிட்டும், வார விடுமுறை நாட்களிலும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதன்படி இன்று வார விடுமுறை முதல் நாளில் கன்னியாகுமரியில் அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பின்னர் அவர்கள் சூரிய உதயத்தை காண திரிவேணி சங்கம கடற்கரையில் திரண்டனர்.
இதற்கிடையே கடந்த இரண்டு வாரங்களாக காலையில் மேகமூட்டம் காரணமாக சூரிய உதயம் தெரியவில்லை. இதனால் சூரிய உதயத்தை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனர். இன்றும் காலையில் கன்னியாகுமரி கடலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் இன்றும் சூரிய உதயம் தெரியாதா? என்ற கவலையில் சுற்றுலா பயணிகள் இருந்தனர். ஆனால் இன்று காலை குறித்த நேரத்தில் கடலில் மேகமூட்டம் விலகியதால் சூரியன் உதித்து செந்நிற கதிர்களை வீசியது. இதனால் கடற்கரையில் நின்ற சுற்றுலா பயணிகள் பரவசமடைந்து ஆதவன் உதித்தலை கண்டு மகிழ்ந்தனர். பெரும்பாலானோர் தங்களது செல்போன்களில் படம் பிடித்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கடலில் புனிதநீராடி விட்டு பரசுராம கணபதி கோயில் மற்றும் பகவதி அம்மன் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவர்கள் கடலில் உள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம், கண்ணாடி பாலத்தை சுற்றிபார்க்க பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு சென்றனர். தற்போது கோடை விடுமுறை, சீசன் காலத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து காலை 6.15 மணிக்கு தொடங்கியது.
இதனால் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கினர். இதையடுத்து காலை 7 மணி முதல் படகு போக்குவரத்து தொடங்கி சுற்றுலா பயணிகள் படகில் சென்று திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் உள்ளிட்ட இடங்களை சுற்றிபார்த்தனர். இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் காந்தி, காமராஜர் மணிமண்டபங்கள், காட்சி கோபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட்டனர். மேலும் குற்றசெயல்கள், அசம்பாவிதங்களை தவிர்க்க கன்னியாகுமரி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
