கோடை மழையால் புல்லாவெளி அருவியில் நீர்வரத்து: குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்

 

பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், பெரும்பாறை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அடர்வனப்பகுதியில் புல்லாவெளி அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு மழை காலங்களில் நீர்வரத்து இருக்கும். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீப காலமாக போதிய மழை இல்லாததால் அருவி முற்றிலும் வறண்டு காணப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெரும்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் புல்லாவெளி அருவிக்கு நீர்வரத்து ஏற்பட்டு தண்ணீர் சலசலவென கொட்டுகிறது. இதனால், பட்டிவீரன்பட்டி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்துச் செல்கின்றனர்.

முன்பு இந்த அருவிக்கு செல்ல போதிய பாதை வசதி இல்லாமல் இருந்தது. கடந்த திமுக ஆட்சியில் அருவியில் மேம்பாட்டு பணி மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அருவிக்கு செல்ல இரும்பு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் எளிதாக அருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இது குறித்து பெரும்பாறையைச் சேர்ந்த ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் ஹேமலதா மணிகண்டன் கூறுகையில், ‘முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள புல்லாவெளி அருவியை மேம்படுத்தி பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி புல்லாவெளி அருவியை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலாத்துறை சார்பில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா அடிப்படை வசதிகளுக்கான மேம்பாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. குறிப்பாக சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இரும்பு படிக்கட்டுகள், பூங்கா, வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறை, அருவியில் பாதுகாப்பாக குளிக்கும் வசதி, உடை மாற்றும் அறைகள் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடிவுற்ற பின்பு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். வாழ்வாதரமும் உயரும்’ என்றார்.

Related Stories: