ஒன்றிய அரசு டெண்டர் வெளியிட்டது; தமிழக கடலோர பகுதிகளில் கச்சா எண்ணெய் எடுக்க ஆய்வு: மீனவ அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பால் பரபரப்பு

 

சென்னை: தமிழக கடலோர பகுதிகளில் கச்சா எண்ணெய் எடுப்பதற்கான ஆய்வு பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு டெண்டர் அறிவித்துள்ளதால், தவெக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் காவிரி வடிநில பகுதியில் குறிப்பாக பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் அதிக அளவிலான ஹைட்ரோகார்பன் வளங்கள் இருப்பது ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மதனம் மற்றும் பந்தநல்லூர் போன்ற நிலப்பரப்பு பகுதிகளில் வர்த்தக ரீதியிலான எண்ணெய் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து, கடல் பகுதிகளில் உள்ள கச்சா எண்ணெய் வளங்களை துல்லியமாக வரைபடம் மூலம் கண்டறியவும், அதன் இருப்பை ஆய்வு செய்யவும் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது.

அதன்படி, தமிழக கடலோர பகுதிகள் முதல் வங்கக்கடலில் மேற்குவங்கம் வரை 5 மண்டலங்களாக பிரித்து கச்சா எண்ணெய் எடுப்பதற்கான டெண்டர் அறிவிப்புகளை ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. திறந்தவெளி உரிம கொள்கையின் கீழ் சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் விரிவான காவிரி கடல் வடிநில பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் கச்சா எண்ணெய் வளங்களை ஆய்வு செய்யவும், துளையிட்டு தரம் பார்க்கவும் இந்த டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இந்த டெண்டர் குறித்து ஒன்றிய அரசு அளித்துள்ள விளக்கத்தில், ‘கடந்த சில ஆண்டுகளில் புதிதாக டெண்டர் விடப்பட்ட பகுதிகளில் இதுவரை பெரிய அளவிலான வர்த்தக ரீதியிலான கச்சா எண்ணெய் கண்டுபிடிப்புகள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. டெண்டர் விடப்பட்ட உடனேயே நிறுவனங்கள் துளையிடும் பணிகளை தொடங்கிவிட முடியாது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கண்டிப்பாக கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி உள்ளிட்ட விரிவான சுற்றுச்சூழல் அனுமதிகளை பெற வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை அரசு கண்காணிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் எண்ணெய் எடுக்கும் முயற்சிக்கு மீனவ அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளன. இதனால் கடல்சார் சூழலியல் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அவர்கள் கருதுகின்றனர்.
இதுகுறித்து அரசு தரப்பில் கூறுகையில், ‘கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் நோக்கத்துடன் இந்த ஆய்வு பணிகள் நடக்கிறது. பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு ஏற்கனவே தமிழநாட்டில் எதிர்ப்புகள் இருக்கும் நிலையில், தற்போது ஒன்றிய அரசு மீண்டும் டெண்டர் வெளியிட்டிருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் ஆளும் தவெக அரசு, ஒன்றிய அரசின் டெண்டர் அறிவிப்புக்கு அனுமதி அளிக்குமா? என்பதும் கேள்வியாக உள்ளது. அவ்வாறு அனுமதி அளிக்கும் பட்சத்தில் பெரும்பான்மை பலத்தை முழுமையாக பெறாத தவெக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.

Related Stories: