×

விளாத்திகுளம் பகுதியில் வறண்ட நிலையில் 100க்கும் மேற்பட்ட கண்மாய்கள்

*தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருப்பு

​விளாத்திகுளம் : விளாத்திகுளம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட கண்மாய்கள் வறண்ட நிலையில் காணப்படுவதால், தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் மானாவாரி விவசாயப் பகுதியான ​விளாத்திகுளம் வட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியக் கட்டுப்பாட்டில் நூற்றுக்கணக்கான கண்மாய்கள் உள்ளன.

கடந்த வடகிழக்கு பருவமழையின் போது ஓரளவு நீர்வரத்து இருந்தபோதிலும், கோடை காலத்தின் கடும் வெப்பம் காரணமாக நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, தற்போது பெரும்பாலான கண்மாய்கள் தூர்ந்துபோயும், தரைமட்டமாகவும் காட்சியளிக்கின்றன.

கண்மாய்களில் நீர் இல்லாததால் நிலத்தடி நீர்மட்டமும் பாதாளத்திற்குச் சென்றுள்ளது. குளம், குட்டைகளில் நீர் வற்றியதால் கால்நடைகளுக்கு தேவையான குடிநீருக்கும், பசுந்தீவனத்திற்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவும் குறைவான வடகிழக்கு பருவமழையின் காரணமாகவும் விளாத்திகுளத்தில் உள்ள வைப்பாறு நீரின்றி வறண்ட நிலையில் காணப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து போதிய மழை இல்லாததால் தொகுதி முழுவதும் உள்ள பல்வேறு நீர்நிலைகள் வறண்ட நிலையிலேயே உள்ளன. அந்த வகையில் பல்வேறு கிராமங்களில் பெய்யும் காட்டாற்று மழை வெள்ளத்தால் விளாத்திகுளம் வைப்பாறு ஆற்றுக்கு வரும் மழைநீர் இந்த ஆண்டு வராததால் வைப்பாறும் வறண்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றங்கரையோரங்களில் செய்யப்படும் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ​விளாத்திகுளம் பகுதியில் மிளகாய், வெங்காயம், உளுந்து, கம்பு, சோளம் போன்ற பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. ஜூன் மாதம் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் பெய்தால் மட்டுமே நிலத்தை உழுது பயிரிடத் தயார் செய்ய முடியும். ஒவ்வொரு ஆண்டும் மழையை நம்பியே எங்கள் வாழ்க்கை இருக்கிறது.

கடந்த மாதங்களில் நிலவிய வெயிலால் நிலங்கள் வெடித்துக் காணப்படுகின்றன.தென்மேற்கு பருவமழை தாராளமாகப் பெய்தால் மட்டுமே கண்மாய்களுக்கு நீர்வரத்து கிடைக்கும், அப்போதுதான் எங்கள் வாழ்வாதாரம் செழிக்கும், என்றனர்.

தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், விளாத்திகுளம் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயத்தில் அதிக மகசூல் பெறும் வகையில் விதைகள் மற்றும் பயிர் தேர்வு, பயன்படுத்தும் உரங்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு வேளாண்மை துறை அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆலோசனைகளை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிலத்தை தயார் செய்யும் பணி

தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் நிலங்களை உழுதல், வரப்புகளை சீரமைத்தல், மழைநீர் தேங்கும் வகையில் கால்வாய்களை தூய்மைப்படுத்துதல், களைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சில பகுதிகளில் டிராக்டர் மற்றும் இயந்திரங்கள் மூலம் நிலங்கள் சமப்படுத்தும் பணிகளும் நடைபெறுகின்றன.

கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு நல்ல மழை பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் பருவமழையை முழுமையாக பயன்படுத்தும் வகையில் முன்கூட்டியே நிலங்களை தயார் செய்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.பருவமழையை எதிர்நோக்கி விளாத்திகுளம் தொகுதியில் விவசாய பணிகள் மீண்டும் சுறுசுறுப்படைந்து உள்ளதால், விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

Tags : Valatikulam ,Department of Public Works and Public Administration ,Vlathikulam District ,Manavari ,Tuthukudi District ,
× RELATED ஆங்கிலேயர் காலத்தில் பின்பற்றப்பட்ட...