சென்னை: 21 வயது பூர்த்தி அடையாதவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மது வாங்க வருவோரின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால் உரிய ஆவணங்களை சரிபார்த்து விற்பனை செய்ய வேண்டும். வயதில் சந்தேகம் ஏற்பட்டால் ஆதார், ஒட்டுநர் உரிமம் போன்ற ஆவணத்தை சரிபார்த்து மது விற்க வேண்டும். 21 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதும் டாஸ்மாக் கடைகளை முறைப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பஸ் நிலையங்கள் அருகே இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டு இருந்தார். அவருடைய உத்தரவை செயல்படுத்தும் விதமாக 717 கடைகள் மூடப்பட்டுவிட்டதாக அரசு தெரிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யும் நடைமுறைகளையும் முறையாக பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது. அதிலும் சமீபகாலங்களாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் மது குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதிகள் 2003, விதி 11ஏ கொண்டுவரப்பட்டது. அதில் 21 வயது பூர்த்தியடையாதவர்களுக்கு மதுபானங்கள் விற்கவோ, வழங்கவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விதியை டாஸ்மாக் கடைகளில் முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற உத்தரவைதான் டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து கடை பணியாளர்களுக்கும் அனுப்பியுள்ளது.
