×

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து வழிபாடு

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்தரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கடந்த 6ஆம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் அளித்தார். 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலுக்கு தமிழகத்திலிருந்தும், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தினாரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து நம்பெருமாளை தரிசனம் செய்வர்.

இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டத்தையொட்டி நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா… ரங்கா… ரங்கா…. என்ற கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தின்போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கோயிலை சுற்றி 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை மற்றும் கோவிலில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

Tags : Srirangam ,Ranganathar ,Temple ,Chithirai Therottam ,Trichy ,Srirangam Ranganathar Temple ,Chithirai festival ,Trichy district ,Namperumal ,
× RELATED பொன்னேரி அருகே செங்கல் சூளையில்...