ஒன்றிய அரசின் திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்தில் கோணிப்பைகள் கிடைக்காமல் தவிப்புக்குள்ளாகும் விவசாயிகள்: மழை பெய்யும் போதெல்லாம் வேதனை

 

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே ஒன்றிய அரசின் திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்தில் சணல் கோணிப்பைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியின் பின்புறம் நீர் பிடிப்பு பகுதியை ஒட்டி அமைந்துள்ளது மோச்சேரி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மதுராந்தகம் ஏரியானது சுமார் ரூ.120 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யப்பட்டு இந்த ஆண்டு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து அந்தப் பகுதியில் உள்ள பாசன கிணறுகள் நிரம்பியது.

இதனால் கிணற்று நீரை பாசனம் செய்து சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பொன்னி, பி.பி.டி., குண்டு, என்.எல்.ஆர் உள்ளிட்ட நெல் ரகங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். தற்போது சம்பா பருவத்தில் பயிரிடப்பட்ட நெல், அறுவடை சீசன் அந்த பகுதியில் களை கட்டியுள்ளது. இந்நிலையில் மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட மோச்சேரி கிராமத்தில் ஒன்றிய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த மாதம் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் நிலையை அதிகாரிகள் நெல்மணிகளை கொள்முதல் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அந்த கொள்முதல் நிலையத்தில் கடந்த சில தினங்களாக கொள்முதல் செய்ய பயன்படுத்தப்படும் சணல் கோணிப் பைகள் இல்லாததால் நெல் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் 3,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் விவசாயிகள் திறந்த வெளியில் கொட்டி வைத்து தார்ப்பாய் போட்டு மூடி பாதுகாத்துள்ளனர். இந்த பகுதியில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து அடிக்கடி மழை பெய்து வருகிறது. மழை பெய்யும் போதெல்லாம் விவசாயிகள் வேதனை அடைகின்றனர். எனவே நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் நெல் கொள்முதல் செய்ய சுமார் 5,000 கோணிப்பைகளை இந்த கொள்முதல் நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: