ஊட்டியில் 21-வது ரோஜா கண்காட்சி தொடங்கியது

நீலகிரி: நிலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை விழாவின் பகுதியாக 21-வது ரோஜா கண்காட்சி தொடங்கியது. சமவெளி பகுதியில் கோடை வெயில் காரணமாக பிற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. ஊட்டியில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வகையில் காலநிலை நிலவுகிறது.

நீலகிரி மாவட்டம் நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் மே மாதம் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி மற்றும் படகுகள் போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ஊட்டியில் உள்ள விஜயநகரம் பகுதியில் ரோஜா பூங்காவில் 21-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கி மே 18-ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்களுக்கு இக்கண்காட்சி நடைபெறுகிறது.

பூங்காவில் பாரம்பரிய ரோஜாக்களுக்கு தனியாக இடம் உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பாரம்பரியமிக்க ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளதால், தற்போது மலர்கள் பூத்து உள்ளது. இந்த ஆண்டு ரோஜா பூங்காவில் பறவைகளை பாதுகாப்போம் என்று கருத்தை மையப்படுத்தி பல வண்ணங்களை கொண்ட ரோஜா மலர்களை கொண்டு அன்னப்பறவை, இருவாச்சி, கழுகு மற்றும் சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவைகளை வடிவமைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்த்து வருகிறது.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதால் 5 நாட்கள் கண்காட்சி நடைபெற உள்ள நிலையில் மேலும் சில நாட்கள் கண்காட்சி நீட்டிக்கப்படும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ரோஜா கண்காட்சிக்கு அடுத்தபடியாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்துவதற்கு ஏற்பாடுகளை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: