சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தரிசனம் ஆடி வெள்ளியையொட்டி அம்மன் கோயில்களில் சிறப்பு அலங்காரம், பூஜை

 

திருப்பூர்,ஆக.1: ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதனால் மற்ற வெள்ளிக்கிழமைகளை விட ஆடி மாதத்தில் வருகிற வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். அதன்படி நேற்று ஆடி மாதத்தின் 3-வது வெள்ளிக்கிழமை ஆகும். இதன் காரணமாக பக்தர்கள் பலரும் தங்களது பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் குவிந்தனர். அங்கு நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர்-தாராபுரம் சாலையில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதுபோல் போலீஸ் லைன் மாரியம்மன் கோயிலில் வன துர்க்கை அம்மன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதுபோல் புஷ்பா சந்திப்பில் பத்ரகாளியம்மன் கோவிலிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டது.

Related Stories: