கோவை, மே 14: மாநகராட்சி உள்விளையாட்டு அரங்க பணிகளை, மாநகராட்சி கமிஷனர் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 83வது வார்டுக்கு உட்பட்ட நேரு விளையாட்டு அரங்கம் அருகில் மாநகராட்சி விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு, மாநகராட்சி பொதுநிதியின் கீழ், ரூ.2 கோடி மதிப்பீட்டில் கைப்பந்து உள்விளையாட்டு அரங்கம் மற்றும் மேற்கூரை அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், கோவை தொகுதி எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பார்வையாளர்கள் காட்சியகம் (Gallery), தனியார் பங்களிப்புடன் ரூ.1.50 கோடியில் மேற்கூரையுடன் கூடிய இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.
தவிர, மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில், மேற்கூரையுடன் கூடிய கபடி உள்விளையாட்டு அரங்கம், மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் மேற்கூரையுடன் கூடிய வுஷூ தற்காப்பு உள்விளையாட்டு அரங்கம் ஆகியவையும் அமைக்கப்பட்டு வருகிறது.
இப்பணிகளை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். இப்பணிகளை, தரமாகவும், விரைவாகவும் செய்துமுடிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி உதவி கமிஷனர் சண்முகம், உதவி பொறியாளர் சதீஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
