கிணத்துக்கடவு, மே 13: திண்டுக்கல் மாவட்டம், தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (28), இவருக்கு ஜெயப்பிரியா (25) என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை குழந்தைகள் இல்லை. இதனால், கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிரகாஷ் கடந்த ஒன்றரை ஆண்டாக, நெகமம் அருகே கொல்லபட்டியில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கி, அங்குள்ள தனியார் கோழிப்பண்ணையில் சூப்பர் வைசராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மனைவியை பிரிந்த மன வேதனையில் இருந்து வந்த அவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
