கோவை, மே 12: கொள்ளை சம்பவங்களை தடுக்க வீட்டை பூட்டி வெளியூர் செல்லும் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கோடை விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் பலர் வெளியூர் சென்று வருகின்றனர். இதனை பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசை காட்ட வாய்ப்புகள் உள்ளது. எனவே வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள், அருகிலுள்ள காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தகவல் தெரிவிக்க வேண்டும். வீடு மற்றும் பீரோ சாவிகளை வீட்டின் ஜன்னல் ஓரங்களிலோ அல்லது எளிதில் கைக்கு கிடைக்கும் இடங்களிலோ வைத்துவிட்டுச் செல்வதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பிட் போலீசாரின் எண்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
