இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவ தளத்தில் ஈரானிய விமானங்கள் ரகசியமாக நிறுத்தப்பட்ட தகவல் வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான மோதலில் ஒரு நடுநிலையான நாடாக பாகிஸ்தான் தன்னை உலக நாடுகளுக்குக் காட்டி வந்தது. இந்தநிலையில் ஒருபுறம் அமெரிக்காவுடன் இணக்கமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டு, மறுபுறம் ஈரானுடன் ரகசிய ராணுவ உறவைப் பேணி வருவதாகப் புகார்கள் எழுந்தன.
அமெரிக்க விமான தாக்குதலில் இருந்து தப்பிக்க பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய மையமான ராவல்பிண்டி அருகே உள்ள நூர் கான் விமானத் தளத்திற்கு ஈரானிய போர் விமானங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள தகவல் வெளியானது. ராணுவ தளவாடங்களில், லாக்ஹீட் சி-130 ஹெர்குலிஸ் போக்குவரத்து விமானத்தின் உளவு மற்றும் புலனாய்வுத் துறை சார்ந்த வகையான ஈரானிய விமானப்படையின் ஆர்சி-130 விமானமும் அடங்கும். இதுபற்றி சி.பி.எஸ் நியூஸ் நிறுவனம் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுடன் போர் நிறுத்தத்தை அறிவித்த சில நாட்களிலேயே இந்த ரகசிய இடமாற்றம் நடந்துள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பிற்காக டிரம்ப், சீனா செல்ல உள்ள நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், ‘பாகிஸ்தான் ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் நாடாகக் காட்டிக் கொண்டு, ஈரானின் ராணுவ நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக உதவி வருகிறது’ என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் சிவில் விமானம் ஒன்று காபூலில் தரையிறங்கியது குறித்தும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இது குறித்து தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹித் கூறுகையில், ‘இல்லை, இது உண்மையல்ல; ஈரான் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை’ என்று மறுத்துள்ளார். இருப்பினும், பாகிஸ்தான் தனது வியூகத்தின் அடிப்படையில் செயல்படுவதால், சர்வதேச அரங்கில் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.
* குற்றச்சாட்டு தவறானது: பாகிஸ்தான் விளக்கம்
அமெரிக்க வான்வழித் தாக்குதல்களில் இருந்து ஈரானிய ராணுவ விமானங்களை பாகிஸ்தான் பாதுகாத்ததாக வெளியான அமெரிக்க ஊடக அறிக்கையை, பாகிஸ்தான் தவறானது எனக் கூறி நிராகரித்தது. அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் முதல் கட்டத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட போர்நிறுத்தக் காலத்தில் நாட்டில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள ஈரானிய விமானங்கள் வந்ததாகவும், எந்தவொரு ராணுவ அவசரகால ஏற்பாடு அல்லது பாதுகாப்பு ஏற்பாட்டுடனும் அவற்றுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தை செயல்முறையுடன் தொடர்புடைய தூதரகப் பணியாளர்கள், பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்களின் வருகைக்கு வசதி செய்வதற்காக ஈரான் மற்றும் அமெரிக்காவிலிருந்து பல விமானங்கள் பாகிஸ்தானுக்கு வந்தன.அடுத்தடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளை எதிர்பார்த்து சில விமானங்களும் ஆதரவுப் பணியாளர்களும் தற்காலிகமாக பாகிஸ்தானில் தங்கி உள்ளனர். முறையான பேச்சுவார்த்தைகள் இன்னும் மீண்டும் தொடங்கவில்லை என்றாலும், உயர் மட்ட தூதரகப் பரிமாற்றங்கள் தொடர்ந்தன.
தற்போது பாகிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ள ஈரானிய விமானங்கள், போர்நிறுத்தக் காலத்தில் வந்தடைந்தன. அவற்றுக்கும் எந்தவொரு ராணுவ அவசரகால ஏற்பாடு அல்லது பாதுகாப்பு ஏற்பாட்டிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இதற்கு மாறாகக் கூறப்படும் கூற்றுகள் ஊகமானவை, தவறாக வழிநடத்துபவை. உண்மை நிலவரத்திலிருந்து முற்றிலும் தொடர்பற்றவை. பேச்சுவார்த்தையை ஊக்குவித்தல், பதற்றங்களைக் குறைத்தல் மற்றும் பிராந்திய, உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை முன்னெடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட அனைத்து நேர்மையான முயற்சிகளுக்கும் ஆதரவளிப்பதில் பாகிஸ்தான் உறுதியுடன் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
