காத்மாண்டு: திங்கள்கிழமை அதிகாலையில் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கியபோது அதன் டயர்களில் தீப்பிடித்தது. “TK726 என்ற அழைப்புக் குறியீட்டைக் கொண்ட அந்த விமானம் இஸ்தான்புல்லில் (Istanbul) இருந்து காத்மாண்டு நோக்கி சென்று தரையிறங்கியபோது அதன் வலது டயர் வெடித்து விமானம் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விமானத்திலிருந்த அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இந்த விமானத்தில் மொத்தம் 278 பயணிகளும் 11 பணிக்குழு ஊழியர்களும் இருந்தனர். பயணிகளில் ஐக்கிய நாடுகள் சபையின் சில அதிகாரிகளும் அடங்கியிருந்தனர்.விரிவான விசாரணை நடைபெற்று வந்தாலும், கடினமான தரையிறக்கம், டயர் அழுத்தப் பிரச்சனைகள் அல்லது பிற தொழில்நுட்பச் சிக்கல்கள் ஆகியவை இதற்கான சாத்தியமான காரணங்களாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொழில்நுட்ப ஆய்வுகள் தொடர்வதால், விமானம் தொடர்ந்து இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விமான நிறுவனம் விமான நிலையத்திற்கு அளித்த தகவலின்படி, இரண்டு பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக கூறியுள்ளது . மேலும், பயணிகள் அனைவரும் அவசரக்கால வாயில்கள் வழியாக வெளியேற்றப்பட்டனர்.
